Dailyhunt

புத்திசாலித்தனமாக விவாதம் செய்வது எப்படி?

Kalki Online 2 years ago

விவாதம் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் இடையே ஏதோ ஒரு தலைப்பினைப் பற்றி பேசப்படும் முறை.

அடிக்கடி குடும்பத்தில் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் பணி செய்யும் இடத்தில் சக அலுவலர்களுடன் விவாதம் தவிர்க்க முடியாதது. பொதுவாக, விவாதம் செய்பவர்கள் தான் சொல்வதுதான் சரி என்று பேசுவார்கள். இதனால் சில மனக்கசப்புகள் கூட ஏற்படும். புத்திசாலித்தனமாக விவாதம் செய்வது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அமைதியாக இருங்கள்: விவாதம் செய்வதற்கு முக்கியத் தேவை அமைதியாக இருப்பது. எதிராளி பேசும்போது குறுக்கிடாமல் பொறுமையாகக் கேட்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல், இடையில் குறுக்கிடாமல் இருக்க வேண்டும். சிறிது கோபப்பட்டாலும் பேசவேண்டியது மறந்து விடும்.

2. உடனடி எதிர்வினை வேண்டாம்: ஒருவர் பேசி முடித்ததும் மற்றவர் உடனே தன்னுடைய கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சற்றே நிதானித்து தான் என்ன சொல்ல வேண்டும் என்பதை மனதிற்குள் சொல்லிப் பார்த்துவிட்டு பின்பு எதிராளியிடம் பேசலாம்.

3. கேள்வி கேட்க வேண்டும்: எதிராளி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். சரியான கேள்விகளை கேட்க முடிந்தால் உங்கள் விவாதம் சரியான திசையில் செல்கிறது என்று பொருள். அதற்கான பதிலை எதிராளி தேடுவார்கள். அவர்களை சற்றே திணறடிக்குமாறு புத்திசாலித்தனமான கேள்விகளைக் கேட்கலாம்.

4. லாஜிக்கோடு பேசுங்கள்: பேச வேண்டும் என்பதற்காக இல்லாமல் உங்கள் வாதம் லாஜிக்குடன் இருக்க வேண்டும். எதிராளியை சிந்திக்க வைக்குமாறு பேச வேண்டும். குரலை உயர்த்தாமல், அதேசமயம் அழுத்தமான கருத்துகளை முன் வைத்து பேச வேண்டும்.

5.கவனமாகக் கேளுங்கள்: என்ன பேசுவது என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டாம். மற்றவர்களின் கருத்துக்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பேச்சில் உள்ள குறைகளும் பலவீனங்களும்புலப்படும். சில சமயங்களில் புதிய வித்தியாசமான தகவல்களைக் கேட்க நேரலாம்.

6. ஏற்றுக்கொள்ளல்: நீங்கள் வாதம் செய்கிறீர்கள் என்பதற்காக எதிராளி பேசும் எல்லாவற்றையும் மறுத்துப் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் சொல்வது ஏற்புடையதாக இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். வாதத்திற்காக ஒவ்வொன்றையும் மறுக்க வேண்டாம்.

7. எதிராளியை நன்றாக கணிக்க வேண்டும்: அவர்களுடைய பலம், பலவீனங்கள், நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். இப்போது என்ன காரணத்திற்காக அவர்கள் வாதாடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதிலிருந்து மேற்கொண்டு வாதாடுவதை தீர்மானிக்க முடியும். சில சமயங்களில் தேவையில்லாமல் பேசும்போது மன அழுத்தத்தை அதிகரித்து ஆற்றலையும் குறைக்கும்.

கோடையில் அவசியம் தவிர்க்கவேண்டிய 8 உணவுகள்!

8. வின் வின் கோட்பாடு: இரு தரப்பினரும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பேச வேண்டும். தான் மட்டும் வாதத்தில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்காமல், எதிராளி பேசுவது ஒப்புக்கொள்வது போல இருந்தால் திறந்த மனதோடு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இருவரும் ஜெயிக்கும்போது வாதம் அழகான முடிவுக்கு வரும்.

9. தனிப்பட்ட தாக்குதல் வேண்டாம்: எப்போதுமே வாதாடும்போது எதிராளியை தனிப்பட்ட முறையில் தாக்கக் கூடாது. அவர்களுடைய வாழ்க்கை முறை, நம்பிக்கை, நேர்மை போன்றவற்றைத் தாக்கக் கூடாது. இவை அபாயமானவை மற்றும் பிரச்னைகளை பெரிதாக்கும்.

10. திசை திரும்பக் கூடாது: திசை திருப்புமாறு எதிராளி பேசலாம். சம்பந்தமில்லாமல் பேசி உங்களை கவனச்சிதறலுக்கு உள்ளாக்கலாம். திடமான மனத்துடன் அவற்றை கண்டு கொள்ளாமல் விட வேண்டும்.

விவாதத்தில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று எந்தக் கட்டாயமுமில்லை. அதில் தோற்றாலும் எதிராளியின் மனதை ஜெயித்து விடலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online