Dailyhunt
எகிப்திய பிரமிடுகளின் பின்னால் மறைந்திருக்கும் மர்மம்!

எகிப்திய பிரமிடுகளின் பின்னால் மறைந்திருக்கும் மர்மம்!

Kalki Online 5 months ago

சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பண்டைய நாகரிகமாக எகிப்து நாகரீகம் நைல் நதிக்கரையில் செழித்து வளர்ந்தது.

எகிப்திய நாகரீகத்தின் அடையாளமாகவும், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும், இன்றளவும் பிரமிடுகள் இருக்கின்றன. அந்த வகையில் எகிப்திய பிரமிடுகள் குறித்தும் அதை எழுப்பிய பண்டைய அரசர்களான ஃபாரோக்கள் குறித்தும் இப்பதிவில் காண்போம்.

எகிப்திய பிரமிடுகள்

எகிப்தியர்களின் பிரமிடுகள் வெறும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டவை அல்ல. ஆன்மீக நம்பிக்கைகள், மறுபிறவி குறித்த அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாக பிரமிடுகள் கட்டப்பட்டன. மிகவும் பிரம்மாண்டமான பிரமிடுகள், எகிப்தியர்களின் பொறியியல் மற்றும் நிர்வாகத் திறனுக்கு சான்றாக இன்றளவும் காட்சி தருகின்றன.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கி.மு.2560 ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என கருதப்படும் கிசாவில் உள்ள கூபுவின் பிரமிட் கட்டுமானத்திற்கு பல டன்கள் எடை கொண்ட சுமார் 20 லட்சம் முதல் 23 லட்சம் சுண்ணாம்புக்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கற்களை நூற்றுக்கணக்கான அடி உயரத்திற்கு துல்லியமாக கூர்மையான வடிவத்தில் எந்தவிதமான நவீன உபகரணங்களும் இல்லாமல் வடிவமைத்தது ஆய்வாளர்களுக்கு பெரிய புதிராகவே உள்ளது.

அருகிலுள்ள குவாரிகளில் வெட்டப்பட்டு படகுகள் மூலம் நைல் நதி வழியாக கொண்டு வந்து சாய்வான தளங்கள் பயன்படுத்தி மேலே ஏற்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பிரமிடின் வெளிப்புற பகுதியில் சூரிய ஒளியில் பிரகாசிக்க வழவழப்பான வெள்ளை சுண்ணாம்புக்கல் பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஃபாரோக்கள்

பண்டையை எகிப்தியின் அரசர்களான ஃபாரோக்களை மக்கள் கடவுளின் அவதாரமாகவே கருதினர். ஃபாரோக்கள் தங்கள் ஆட்சி முழுவதும் அரசியல் மற்றும் மத ரீதியான அதிகாரத்தின் உச்சத்தில் இருந்ததோடு மறு உலக வாழ்க்கைக்கு தங்களை தயார்படுத்துவதை கடமைகளில் ஒன்றாக கருதினர். மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையின் நம்பிக்கையின் காரணமாக ஃபாரோக்கள் தங்களது உடலை பாதுகாக்க பதப்படுத்தினர்.

மம்மிஃபிகேஷன் (Mumification) என்று அழைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட இந்த செயல்முறை மம்மிகள் என்ற பிரமிடுகளில் வைக்கப்படுவதோடு, அடுத்த உலகத்தில் சேவை செய்வதற்காக பணியாளர்களின் சிலைகள் மற்றும் தங்க ஆபரணங்கள், உணவு, பானங்களுடன் புதைக்கப்பட்டனர்.

துட்டன்காமன் ஃபாரோக்களின் வரலாற்றில் ஒரு சிறிய ஃபாரோவாக இருந்தாலும், 1922ல் கண்டுபிடிக்கப்பட்ட அவரது கல்லறையில் (கிங் டட்ஸ் டோம்) இருந்த தூய தங்க முகமூடி, சிம்மாசனங்கள் போன்ற பொக்கிஷங்கள் அந்த காலத்தின் செல்வ செழிப்பையும், கலை நுணுக்கத்தையும் எடுத்துக் காட்டின. பெண்களும் ஃபாரோக்களாக இருந்த எகிப்திய நாகரிகத்தில், ஹட்செப்சுட் என்ற பெண் ஃபாரோ, எகிப்தின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டத்திற்கு தலைமை தாங்கி, வலிமையான இராணுவ மற்றும் வணிகத் தலைவராக இருந்துள்ளார்.

நைல் நதி:

நைல் நதியின் நீர் பெருக்கு, விவசாய நிலங்களுக்கு வளமான வண்டல் மண்ணை கொண்டு வந்து உணவு உற்பத்தி செழித்து வளர உதவியோடு, எகிப்திய நாகரிகத்தின் உயிர்நாடியாகவும் நைல் நதி இருந்துள்ளது. பெரிய கட்டுமான பணிகளுக்கு தேவையான நிதி ஆதாரத்தையும், மனித உழைப்பையும் இந்த விவசாய செழிப்பு தான் பாரோக்களுக்கு வழங்கியது.

கண்டுபிடிக்கப்படாத தோற்றம்: நைல் நதியின் அதிசயமான ரகசியங்கள்!

ஹையரோகிளிஃப்ஸ் எழுத்துமுறை எகிப்தியர்களின் நிர்வாகம், மதநம்பிக்கைகள், மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ள உதவியது. இன்றளவும் கம்பீரமாக காட்சி தரும் பிரமிடுகள் மற்றும் ஃபாரோக்களின் வாழ்க்கை முறை மனித குலத்தின் கூட்டு உழைப்பை காட்டுவதாக அமைந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online