Dailyhunt
ஜோதிர்லிங்க தரிசனம்: பார்லி வைத்தியநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?

ஜோதிர்லிங்க தரிசனம்: பார்லி வைத்தியநாதர் கோயிலுக்கு எப்படிச் செல்வது?

Kalki Online 1 month ago

ஜோதிர் லிங்கங்களை தரிசனம் செய்வதற்காக நாங்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை நகர்சோல் எக்ஸ்பிரஸ்ஸில் (Nagarsol Express) புறப்பட்டு அடுத்த நாள் காலை பர்பானி என்ற இடத்தை அடைந்து அங்கிருந்து புக் செய்திருந்த ஹோட்டலுக்கு சென்று தயாராகி நாகநாதம் சென்று நாகநாதம் ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்தோம்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு பார்லி வைத்தியநாதர் ஜோதிர் லிங்கத்தையும் கண்குளிர தரிசனம் செய்தோம்.

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான பார்லி வைத்தியநாத் கோவில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் (Beed) மாவட்டத்தில் உள்ள பார்லி (Parli) நகரில் அமைந்துள்ளது.

மூலவர் - வைத்தியநாதர்

அம்பிகை - தையல்நாயகி

தீர்த்தம் - பரளி தீர்த்தம், சூரிய தீர்த்தம் மற்றும் கங்கா தீர்த்தம்.

சித்த பூமி என்று அழைக்கப்படும் இத்தலம் ராணி அகல்யாபாய் ஹோல்கரால் 18 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. இந்த பழமையான கோவில் ஒரு உயரமான குன்றின் மீது கருப்பு கற்களால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஈசனை பக்தர்கள் தொட்டு அபிஷேகம் மற்றும் வழிபாடு செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள். இங்குள்ள ஈசன் நோய்களைத் தீர்க்கும் மருத்துவராக அருள் புரிகிறார். ராவணனுடன் தொடர்புடைய மிகவும் பழமையான மற்றும் சக்தி வாய்ந்த கோவில் இது.

புராணக்கதை:

ராவணன் சிவனிடம் வரம் பெற்று லிங்கத்தை காசியில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லும் வழியில் அதை தூக்கிச்செல்ல முடியாமல் ஓரிடத்தில் வைத்துவிட மீண்டும் எடுக்க முயன்றபொழுது முடியாமல் போகவே இங்கு சிவலிங்கம் நிலைபெற்றதாக புராணக்கதை கூறுகிறது. இங்கு ஈசனுக்கு அமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள ஈசன் சாளக்கிராமக் கல்லால் ஆனவர்.

பாற்கடலைக் கடைந்த பொழுது வெளிப்பட்ட அமிர்தத்தை அடைவதற்காக தேவர்களும், அசுரர்களும் போட்டியிட, விஷ்ணு பகவான் அதை லிங்கத்தில் மறைத்து வைத்ததால் லிங்கத்தைத் தொடும் எவரும் அமிர்த சக்தியைப் பெறமுடியும் என்று கூறுகிறார்கள். பாற்கடல் அமிர்தம் மற்றும் ராவணன் கதை என இரண்டு புராணக்கதைகள் இக்கோவிலுடன் தொடர்புடையது.

கோவில் கற்களால் கட்டப்பட்டு ஒரு கோட்டை போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. சத்தியவானும் சாவித்திரியும் இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. புகழ் பெற்ற சத்தியவான் சாவித்திரியின் கதை இங்குள்ள நாராயண மலைப் பகுதியில்தான் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு:

மூலவர் விமானம் இரவில் அற்புதமாக காட்சி தருகிறது. நீண்ட படிகள் மற்றும் பிரம்மாண்டமான நுழைவாயில் கிழக்கு நோக்கிய கோவிலுக்கு தெற்கு மற்றும் வடக்கு திசைகளில் இரண்டு வாயில்கள் உள்ளன. இங்குள்ள மகா மண்டபம் மரத்தால் ஆனது. இங்கு மற்ற ஆலயங்களை விட வித்தியாசமாக 3 நந்திகள் ஒரு மண்டபத்தின் கீழ் காணப்படுகிறது. முன் மண்டபத்தில் வீரபத்திரர், காசி விஸ்வநாதர் மற்றும் லட்சுமி தேவியின் சன்னதிகள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் த்ரயம்பகேஸ்வரர், வருணேஸ்வர், கிருஷ்ணேஸ்வரர், குபேரர் சன்னதிகள் என பல சன்னதிகள் காணப் படுகின்றது. இங்குள்ள மகா தேவருக்கு துளசி இலைகளும், விஷ்ணுவிற்கு வில்வ இலைகளும் சார்த்தப்படுகிறது. இது அரியும் அரனும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் உள்ளது.

திருவிழாக்கள் மற்றும் விசேஷங்கள்:

இங்கு மகா சிவராத்திரி, பிரதோஷ தினங்கள், ஸ்ராவண மாதங்கள், ஹோலிப் பண்டிகை மற்றும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஜயதசமி திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

பசிபிக் கடலின் ரகசிய சொர்க்கம்: டோங்கா தீவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!

எப்படி செல்வது?

கோவிலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பார்லி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள குளிர் காலம் மற்றும் ஸ்ராவண மாதங்கள் கோவிலுக்கு செல்ல சிறந்த நேரங்கள் ஆகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online