Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காலநிலை மாற்றம் - தமிழ்நாட்டின் மீதான தாக்கம்!

காலநிலை மாற்றம் - தமிழ்நாட்டின் மீதான தாக்கம்!

Kalki Online 2 years ago

-மரிய சாரா

காலநிலை மாற்றம் என்பது உலகம் முழுவதும் இன்று எதிர்நோக்க வேண்டிய மிக முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும்.

இதன் தாக்கங்கள் மனிதர்கள், விலங்குகள், மற்றும் பருவநிலை ஆகிய அனைத்தின் மீதும் படிப்படியாக அதிகரித்து வருவதை நாம் பார்க்க முடிகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இது மக்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

வானிலை மாற்றத்தின் அடிப்படை காரணங்கள்

காலநிலை மாற்றத்தின் முக்கியக் காரணம் மனிதனால் உருவாக்கப்படும் கார்பன் டையாக்சைடு (CO₂) மற்றும் பிற குளோரோஃப்ளூரோ கார்பன்கள் (CFC) ஆகியவற்றின் அதிகரிப்பு தான். இவை வளிமண்டலத்தில் நிறைந்து, பூமியின் வெப்பநிலையை அதிகரிக்கின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வாகனப் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் காட்டுத்தீ போன்றவை தான் இந்த ஆபத்தான மாற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

தமிழ்நாட்டின் காலநிலை மாற்றம்

தமிழ்நாடு ஆண்டுதோறும் அதிக அளவிலான பருவமழையை பெரும் மாநிலங்களில் ஒன்றாகும். ஆனால், அண்மை கால ஆய்வுகள் மற்றும் தரவுகளின்படி, கடந்த சில ஆண்டுகளில் பருவமழை பெய்யும் காலம் மற்றும் அளவு பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இதனால், விவசாயம், மின்சாரம், குடிநீர் போன்ற மிக அத்திவாவசியத் தேவைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

விவசாயத்தின் மீதான தாக்கம்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் என்பது அதிகம் சார்ந்திருப்பது விவசாயத்தைத்தான். ஆனால், காலநிலை மாற்றத்தால் பருவமழை மற்றும் வெப்பநிலை மாறுவதால் விவசாயத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2020-21ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் மொத்த 77.87 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்றுள்ளது. அதில், 32% நிலப்பகுதியில் மட்டும் நெல் பயிர் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதில் பருவமழையின் குறைபாடுகள் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக, 10% பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 விவசாயம்...

நீர்வளத்தின் மீதான தாக்கம்

அதிக அளவில் ஏரி குளங்கள் என நீர் ஆதாரங்கள் கொண்ட தமிழ்நாட்டில் இன்று பெரும்பாலான நீர் வளங்கள் வற்றிப்போய் உள்ளன. முக்கியமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை முதலிய பெரு நகரங்களில் உள்ள ஏரிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் அதிக அளவில் வற்றியுள்ளன. 2019-20 ஆம் ஆண்டில், சென்னையில், 54.24% குடிநீர் தேக்கம் இருந்தது, ஆனால் 2021-22 ஆம் ஆண்டில் இது 28.43% ஆக குறைந்துள்ளது.

மழைக்காலத்தின் மாற்றம்

தரங்கம்பாடி மற்றும் மாமல்லபுரம் போன்ற கடற்கரை பகுதிகளில் அதிகரிக்கும் கடல் மட்டமும், மழைக்காலத்தின் மாற்றமும் சிறுவணிகர்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில், மொத்தமாக 347.5 மில்லிமீட்டர் மழை பதிவாகி, 1,800 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டது. பொதுவாக மழைக்காலமாக இருந்த மாதங்களின் மழை பெய்யாமல் மாறி பெய்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகின்றது.

தாமரை இலைத் தண்ணீரும், பஞ்சு திரியும்!

தீர்வுகள் மற்றும் முன்னெடுப்புகள்

தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசு இந்த மாற்றங்களை கையாள்வதற்கு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. மழைநீர் சேகரிப்பு, கிராமங்களில் பசுமை இல்ல அமைப்புகள் போன்ற திட்டங்கள் மூலம் மழை நீரை சேமித்து நிலத்தடி நீரின் அளவை அதிகரிக்க முயன்று வருகின்றன. மேலும், சூரிய ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்து, சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்காத ஆற்றல் வளத்தை வழங்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு மற்றும் மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. தீர்வுகள் எதுவாக இருந்தாலும், எடுக்கும் நடவடிக்கைகளின் தாக்கம் நீண்ட காலம் நிலைக்க வேண்டும் என்பதே மிக முக்கியம். மக்கள் ஒவ்வொருவரும் சூழலியல் செயல்பாடுகளை கடைபிடித்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, நம் நாட்டு வளங்களை பாதுகாத்து, ஒரு நல்ல ஆரோக்கியமான நாளைய பொழுது என்பது சாத்தியமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online