Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கமகம வாசனையுடன் புனுகுலுவும், ருசியில் அசத்தும் கொத்து கத்திரிக்காய் கிரேவியும்!

கமகம வாசனையுடன் புனுகுலுவும், ருசியில் அசத்தும் கொத்து கத்திரிக்காய் கிரேவியும்!

Kalki Online 1 year ago

பாத்திரத்தை திருப்பிக் கொடுக்கும்பொழுது அதில் ஏதாவது வைத்துக் கொடுப்பது எல்லோருடைய வழக்கம் ஆகும். அதுபோல் தெலுங்கு பேசுபவர்கள் நம் பாத்திரத்தை திருப்பி கொடுக்கும் பொழுது சட்டென்று நம்மிடம் பேசிக் கொண்டே செய்யும் ஒரு எளிமையான ரெசிபிதான் புனுகுலு என்பது.

அதை எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்.

புனுகுலு செய்ய தேவையான பொருட்கள்:

இட்லி மாவு -இரண்டு கப்

அவல் பொடி - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் -ஒரு டீஸ்பூன்

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

நறுக்கிய வெங்காயம் -அரை கப்

நறுக்கிய பச்சை மிளகாய்- 3

கறிவேப்பிலை நறுக்கியது-இரண்டு ஆர்க்கு

மல்லித்தழை நறுக்கியது- கைப்பிடி அளவு

இஞ்சி நறுக்கியது -ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

அகலமான பாத்திரத்தில் மாவுகளுடன் மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து 25 நிமிடம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக எடுத்து போண்டாக்களாக கிள்ளிப்போட்டு மொறு மொறுப்பாகவும், நல்ல பொன்னிறமாகவும் பொரித்து எடுக்கவும். இதை தேங்காய் சட்னி அல்லது வேர்கடலை சட்னி என்று விருப்பப்பட்ட சட்னியுடன் சாப்பிடவும். வித்தியாசமான ருசியில் அசத்தும்.

ஈசியா சமைக்கலாம், ஜாலியா சாப்பிடலாம் சுவையான ஸ்வீட் பர்பிகள்..!

கொத்து கத்திரிக்காய் கிரேவி:

செய்ய தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்திரிக்காய் -பனிரெண்டு

சின்ன வெங்காயம்- 18

பூண்டு பல்- 4

புளி- கொட்டைப்பாக்கு அளவு

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

வறுத்து அரைக்க:

தேங்காய் துருவல் -ஒரு டேபிள் ஸ்பூன் , கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, மல்லி விதை, சீரகம் தலா- ஒரு டீஸ்பூன் வரமிளகாய் -10 வெந்தயம் கால் டீஸ்பூன்

செய்முறை:

வறுத்து அரைக்க கொடுத்த பொருட்களை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும். பின்னர் அதே வாணலியில் எண்ணெய் விட்டு உரித்த சின்ன வெங்காயம், பூண்டு, புளி, சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

கத்திரிக்காயை காம்புடன் நான்காக கீறி அதில் அரைத்த மசாலாவை ஸ்டஃப் செய்து வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த கத்திரிக்காய்களை ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கமாக வைத்து அடுப்பை மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் வரை மூடி வேகவிடவும்.

கத்திரிக்காய் நன்றாக வெந்ததும் மீதமுள்ள மசாலா கலவையை அரை கப் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து சற்றே கெட்டியாக கொதிக்க விட்டு கிரேவி பதம் வந்ததும் இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும். இந்த கொத்து கத்திரிக்காய் கிரேவி மிகவும் ருசியாக இருக்கும். சாதம் சப்பாத்தி என்று சாப்பிட ருசி அள்ளும். இப்படி செய்து கொடுத்தால் கத்திரிக்காய் சாப்பிடாதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். செய்து அசத்துங்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online