Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கத்தரிக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் சீக்ரெட் கத்தரிக்காய் சாதம்!

கத்தரிக்காய் பிடிக்காதவங்களும் கேட்டு வாங்கி சாப்பிடும் சீக்ரெட் கத்தரிக்காய் சாதம்!

Kalki Online 2 weeks ago

திய உணவிற்கு லஞ்ச் பாக்ஸ் கட்ட வேண்டும் என்றாலே, வழக்கமான லெமன் சாதம் அல்லது புளிசாதம் செய்து பலருக்கும் அலுத்துப் போயிருக்கும்.

காய்கறிகள் சேர்த்த வெரைட்டி ரைஸ் செய்யலாம் என்றால், குழந்தைகள் கத்தரிக்காயைப் பார்த்தாலே தட்டில் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.

ஆனால், கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் மிகவும் பிரபலமான 'வாங்கி பாத்' எனப்படும் கத்தரிக்காய் சாதம் அந்த மாதிரியான ஒரு சாதாரண உணவு கிடையாது. கத்தரிக்காயின் துவர்ப்புத் தன்மை துளியும் தெரியாமல், நாம் வீட்டிலேயே வறுத்து அரைக்கும் அந்த ஒரு 'சீக்ரெட் மசாலா' சாதத்துடன் சேரும்போது, சுவை வேற லெவலில் இருக்கும். சரி வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • உதிரியாக வடித்த சாதம் - 2 கப்

  • கத்தரிக்காய் - 6

  • புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

  • வேர்க்கடலை - ஒரு கைப்பிடி

  • கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • நல்லெண்ணெய் அல்லது நெய் - 3 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவையான அளவு

சீக்ரெட் மசாலா:

  • கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 1 டேபிள் ஸ்பூன்

  • தனியா - 1.5 டேபிள் ஸ்பூன்

  • சீரகம், மிளகு - தலா 1/2 டீஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் - 5

  • துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

  • பட்டை - 1 சிறிய துண்டு, கிராம்பு - 2

 brinjal rice கத்தரிக்காய் சாதம்

செய்முறை!

இந்த சாதத்தின் முழு சுவையையும் தீர்மானிப்பதே நாம் அரைக்கும் மசாலா தான். முதலில் ஒரு வெறும் கடாயில் வறுக்கக் கொடுத்துள்ள பருப்பு வகைகள், மல்லி, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு மற்றும் மிளகாயை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

கடைசியாக துருவிய தேங்காயைச் சேர்த்து லேசாக வறுத்து, அனைத்தும் முழுமையாக ஆறியதும் மிக்ஸியில் தண்ணீர் எதையும் சேர்க்காமல் சற்று கொரகொரப்பான பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ரகசிய மசாலாப் பொடிதான் கத்தரிக்காய் சாதம் ரெசிபிக்கு அந்த அசல் கல்யாண வீட்டு மணத்தைக் கொடுக்கும்.

அடுத்ததாக, நறுக்கிய கத்தரிக்காய்களைக் கருக்காமல் இருக்க தண்ணீரில் போட்டு வையுங்கள். இப்போது அடுப்பில் ஒரு அகலமான கடாயை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாக தாளிக்கவும்.

தாளிப்பு பொரிந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெயிலேயே கத்தரிக்காய் முக்கால் பதம் சுருண்டு வெந்ததும், கரைத்து வைத்துள்ள கெட்டியான புளித்தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.

புளித்தண்ணீர் சுண்டி, கத்தரிக்காய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில், நாம் அரைத்து வைத்துள்ள சீக்ரெட் மசாலாப் பொடியில் இருந்து 3 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துப் பிரட்டுங்கள். மசாலா கத்தரிக்காயோடு சேர்ந்து தொக்கு போல மாறும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, நாம் முன்கூட்டியே உதிரி உதிரியாக வடித்து ஆறவைத்துள்ள சாதத்தை இதில் கொட்டி, அரிசி உடையாமல் மிக மெதுவாகக் கிளறி விடுங்கள்.

வீடு முழுவதும் மசாலா வாசம் கமகமக்கும் சுவையான கத்தரிக்காய் சாதம் தயார். இதை ஒரு பத்து நிமிடம் மூடி வைத்துவிட்டு சாப்பிட்டால், மசாலா முழுவதும் சாதத்தில் இறங்கி தேவாமிர்தமாக இருக்கும். உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது அப்பளத்துடன் இதை லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுத்தால், டப்பா உடனே காலியாகி திரும்பி வரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online