Dailyhunt

கோடை காலத்தில் உங்கள் இம்யூனிட்டியை அதிகரிக்கும் 5 வழிகள்!

Kalki Online 2 years ago

வெளிய தல காட்ட முடியல. கோடை வெயில் கோரத்தாண்டவம் ஆடுது. இது போன்ற தருணங்களில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இருப்பினும் அதிக வெப்பத்தால் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்பட்டு பருவகால நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். எனவே கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். சரி வாருங்கள் இப்பதிவில் கோடையில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்படி அதிகரிப்பது எனப் பார்க்கலாம்.

Pot Water Benefits: மண்பானையில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
  1. தண்ணீர் குடியுங்கள்: முதலில் தண்ணீர் அதிகமாகக் குடியுங்கள். உடல் நிரேற்றத்துடன் இருந்தாலே நோய் எதிர்ப்பு மண்டலம் முறையாக இயங்கி அதிக ஆற்றலுடன் இருக்கும். அதிக வெப்பத்தால் லேசாக ஏதாவது வேலை செய்தாலே வியர்வை வழியாக உடலில் உள்ள தண்ணீர் வெளியேறி, திரவ அளவைக் குறைக்கிறது. எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூலமாக, உடலை நீரேற்றத்துடன் பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக உடலுக்கு ஊட்டமளிக்கும் பழச்சாறுகள், மூலிகை தேநீர், இளநீர் போன்றவற்றை தேர்வு செய்து குடிப்பது, உங்களது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்.

  2. பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுங்கள்: கோடைகாலத்தில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு செயல்பாடு அதிகரித்து பல்வேறு விதமான உடல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க உதவும். இச்சமயங்களில் உடலில் சரியான அளவு விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தேவைப்படுவதால், தர்பூசணி, சிட்ரஸ் பழங்கள், கீரைகள், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  3. Vitamin D - கோடையில் சூரிய ஒளி அதிகம் இருப்பதால் இயற்கையாகவே விட்டமின் டி உங்களுக்கு அதிகம் கிடைக்கும். எனவே காலை வெயிலில் சிறிது நேரம் செலவிடுங்கள். உங்கள் சருமத்தை வெயிலில் வெளிப்படுத்துவதன் மூலமாக விட்டமின் டி உற்பத்தியாகி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழிவகுக்கிறது. இருப்பினும் வெயிலில் இருக்கிறேன் என்கிற பெயரில் நீண்ட நேரம் வெயிலிலேயே இருக்காதீர்கள். அதிகமான வெப்பம் இருக்கும் தருணங்களில் சன் ஸ்கிரீன் பயன்படுத்தி வெளியே செல்வது பாதுகாப்பானது.

  4. உடற்பயிற்சி: வழக்கமாக உடற்பயிற்சி செய்து வந்தாலே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு, உயிரணுக்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போய்ச் சேர்வது அதிகரிக்கிறது. எனவே வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது மிதமானது முதல் தீவிர உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கோடைகாலத்தில் அதிக வெப்பமான நேரங்களில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதிகாலை மற்றும் மாலையில் சூரியன் மறைந்ததும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

  5. போதுமான ஓய்வு: ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்புக்கு போதுமான ஓய்வு அவசியம். எனவே முறையாகத் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். குளிர்ந்த, இருண்ட மற்றும் அமைதியான தூக்க சூழலை உருவாக்கி, நன்றாகத் தூங்குங்கள். கூடுதலாக தூங்குவதற்கு முன் தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை செய்தால் உங்களது மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும். இதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு அமைப்பு சிறப்பாக செயல்படும் வாய்ப்புள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online