Dailyhunt
குஜராத்தில் உயர்ந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை!

குஜராத்தில் உயர்ந்து வரும் சிங்கங்களின் எண்ணிக்கை!

Kalki Online 11 months ago

குஜராத் மாநிலத்தில் 16வது முறையாக சிங்கங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சிங்கங்களின் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

இந்த வருடம் மே 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் அரசு வனத்துறை அதிகாரிகள், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 3000 பேர் இந்த முயற்சியில் பங்களித்தனர்.

இந்த முயற்சியில் சிங்கங்களின் கணக்கெடுப்பு நேரடியாக சரிபார்ப்பது போன்ற மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்தியது. இந்த முறை கணக்கெடுப்பின் துல்லியம் குறித்து பாராட்டப்பட்டது. அதிக உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், கேமரா பொறிகள் மற்றும் ஜிபிஎஸ் மூலம் இயக்கப்பட்ட ரேடியோ காலர்கள் உள்ளிட்ட நவீன கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டன.

கணக்கெடுப்பில் பங்கு கொண்டோர் சிங்கத்தின் பாலினம், வயது, உடல் பண்புகள், இருப்பிடம், திசை போன்ற முக்கியத் தகவல்களையும் பதிவு செய்தனர். மொத்தமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தாலுகாக்களில் சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டது. இதில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 674லிருந்து 891 ஆக உயர்ந்துள்ளது.

5 வருடங்களில் 217 சிங்கங்களின் அதிகரிப்பு என்பது பாராட்டத்தக்கது. அதேநேரம் சிங்கங்கள் அதிகரிப்பு, அவற்றின் எல்லையையும் அதிகரிக்க வைக்கிறது. கடலோர மற்றும் காடுகள் அல்லாத பகுதிகள் உட்பட சவுராஷ்டிரா பிராந்தியத்தில் 11 மாவட்டங்களில் சிங்கத்தின் நடமாட்டம் விரிவாக்கப்பட்டிருக்கிறது. சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அதன் பாரம்பரிய வாழ்விடங்களைத் தாண்டி பரவியுள்ளது.

குஜராத் வனத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போதைய எண்ணிக்கையில் 196 ஆண் சிங்கங்களும், 330 பெண் சிங்கங்களும் மற்றும் 225 குட்டிகள் உள்ளன. சிங்கங்களின் வளர்ந்து வரும் தகவமைப்புத் தன்மை இந்தப் பரவலை விரிவடைய வைத்துள்ளது.

வளமான மண்ணைக் கண்டறியும் வழிகள்!

கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்திற்குள் 384 சிங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 507 சிங்கங்கள் அதன் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் வாழ்கின்றன. இந்த நீட்டிக்கப்பட்ட வாழ்விடங்களில் மிடியாலா, பானியா, கிர்னார் மற்றும் பர்தா போன்ற பிற சரணாலயங்களும் அடங்கும். போர்பந்தரிலிருந்து வெறும் 15 கிலோ மீட்டர் தொலைவில் 17 சிங்கங்கள் தனியாகக் காணப்பட்டன. பாவ்நகர் மாவட்டத்தில் 17 சிங்கங்கள் காணப்பட்டது மிகப்பெரிய பெருமை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்தத் தகவலை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஜெய்பால் சிங் உறுதிப்படுத்தினார்.

ஜுனாகத், கிர் சோம்நாத், பாவ்நகர், அம்ரேலி, ராஜ்கோட், மோர்பி, சுரேந்திரநகர், பொடாட், போர்பந்தர், ஜாம்நகர் மற்றும் தேவபூமி துவாரகா ஆகிய மாவட்டங்களில் சிங்கங்கள் புதியதாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கங்களின் வளர்ந்து வரும் எண்ணிக்கை, மாநில அரசு தொடர்ச்சியாக எடுத்து வந்த நடவடிக்கையின் காரணமாக நிகழ்ந்துள்ளது. அதேவேளையில் பாரம்பரியமில்லாத பகுதிகளில் சிங்கங்களின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதும் அவசியம்.

புதிய பகுதிகளில் காணப்படும் சிங்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது சிங்கங்கள், மனிதர்கள் இடையிலான மோதலை தவிர்க்கும். இந்த வளர்ந்து வரும் சிங்கங்களின் இருப்பு, பாதுகாப்பு முயற்சிகளின் தொடர்ச்சியான வெற்றியையும், அவற்றின் அதிகரித்து வரும் எண்ணிக்கையை ஆதரிக்க விரிவாக்கப்பட்ட மேலாண்மை உத்திகளின் அவசியத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online