மனம் என்பது ஒரு குரங்கு. மனதை நிலையாக வைத்திருக்க பெரும்பாடு படவேண்டும். மனம் என்பது ஒரு மனிதனுடைய உடல் சார்ந்த உறுப்பல்ல.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்" என்ற வள்ளுவர் கூற்றுப்படி அறச்செயல்கள் அனைத்திற்கும் எப்படி மனமே காரணமாக அமைகிறதோ அதுபோலவே அறமற்ற செயல்களுக்கும் அதுவே துணையாக இருக்கும். அதனை நம் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது அவ்வளவு லேசான காரியம் இல்லை.
மனம் சஞ்சலப்படாமல் இருக்க தேவையில்லாத விஷயங்களில் மனதை ஈடுபடுத்தாமல் இருப்பதே சிறந்தது. பொதுவாகவே மனிதர்களின் மனம் பல சிந்தனைகளில் அலைபாய்ந்து குழம்பி சஞ்சலப்படும். காரணம் எப்பொழுதுமே நாம் நமக்காக வாழாமல் மற்றவர்களை திருப்தி படுத்தவே நினைக்கிறோம்.
ஒருவரை திருப்திபடுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அது ஒருபோதும் நடக்காது. அது நம் வேலையும் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் குறிக்கோளை நோக்கி கவனம் செலுத்தவேண்டும்!அதேபோல் மனிதனின் மனம் மற்றவர்களுக்காகவே வாழ நினைக்கிறது. இதுவும் தவறு. நம் வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். மற்றவர்களுக்காக வாழ நினைப்பது சரியில்லை. அவர்கள் என்ன நினைப்பார்கள், இவர்கள் என்னை நினைப்பார்கள் என்று மற்றவர்களைப் பற்றியே சிந்தனை செய்வதால் நம் மனம் அமைதியின்றி சஞ்சலப்படுகிறது.
இன்னும் சிலரோ கற்பனை உலகத்திலேயே சஞ்சரிப்பார்கள். இதனால் நிஜமான, நிதர்சனமான நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பார்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சஞ்சலப்படுவார்கள், மன வேதனைப்படுவார்கள்.
இந்த மனஉளைச்சலுக்கு நாம்தான் காரணம் என்பதை முதலில் அறிய வேண்டும். பிறகு வாழ்வின் உண்மையான நிலையை அறிந்து கொண்டு, எதார்த்தத்தை புரிந்துகொண்டு வாழப்பழக ஆரம்பித்தால் மனம் சஞ்சலமடையாது.
மனம் அச்சமின்றி இருப்பதே உண்மையான சுதந்திரம் தெரியுமா?கடைசியாக ஒன்று. மனம் சஞ்சலப்படுவதை நிறுத்த எதிர்மறை எண்ணங்களை நம் மனதை விட்டு அகற்றி விடவேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்களைக் கொண்டு செயலாற்ற அது சிறப்பாகவே முடியும். அத்துடன் சில விஷயங்களை நம்மால் எவ்வளவு முயற்சித்தாலும் மாற்ற முடியாது என்று தெரிந்து கொண்டதும் அதை ஏற்கப் பழக வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அதன் நிறை குறைகளுடன் ஏற்றுக் கொள்ள பழகிவிட்டால் மனம் சஞ்சலப்படாது.
என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!

