Dailyhunt
மனிதனை மேன்மைப்படுத்துவது எது தெரியுமா?

மனிதனை மேன்மைப்படுத்துவது எது தெரியுமா?

Kalki Online 1 year ago

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்கிறார் திருவள்ளுவர்.

ஒரு மனிதன் பிறரிடம் இருந்து ஒரு உதவியைப் பெற்றால் அதை தக்க தருணம் பார்த்து அவர்களே கேட்காத பொழுது நாமே நேரிடையாகச் சென்று உதவி, அவர்களின் துன்பங்களை போக்குவதுதான் சிறந்த அறம்.

ஒரு மாணவன் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் ஏழ்மையான நிலைதான் அப்பொழுது. இருந்தாலும் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டான். பாடங்களில் எந்தவித குழப்பமும் இல்லை. பரீட்சைக்கு பணம் கட்ட வேண்டும். ஆனால் வசதி இல்லை. என்ன செய்வது என்று யோசித்த பொழுது தான் படித்த புத்தகங்கள் அனைத்தையும் விற்று அதில் வரும் தொகையை கட்டுவதற்கு முடிவு செய்தான். ஆதலால் அந்த புத்தகங்களை எல்லாம் விற்றுவிட்டு ஒத்தையடி பாதை வழியாக வந்து கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் தாகம் அவனை வாட்டியது. எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தான். அங்கு ஒரு ஒத்தை வீடு தெரிந்தது. அந்த வீட்டை நெருங்கி அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டான். ஆனால் அவர்களோ இரண்டு குவளை நிறைய நன்றாக கடைந்த மோரை கொண்டு வந்து கொடுத்தார்கள். நீர் கேட்டவனுக்கு மோர் கொடுத்தால் எப்படி இருக்கும். அந்த தாகத்தில் அது அவனுக்கு அமிர்தம்போல் இருந்தது. அவன் மிகவும் மகிழ்ந்து அந்த மோரைப் பருகிவிட்டு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்து ஊர் வந்து சேர்ந்தான்.

பிறகு சில வருடங்கள் கழித்து மருத்துவராகப் பணி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த ஆஸ்பத்திரிக்கு ஒரு முதியவர் வந்திருந்தார். அவரைப் பார்த்து மருத்துவமெல்லாம் செய்து, அவ்வப்பொழுது தன் தந்தையை கவனிப்பதுபோல் கவனித்துக் கொண்டார். பிறகு உடல் நலம் தேறி அந்த முதியவர் ஊர் திரும்பும் பொழுது, எவ்வளவு பணம் கட்ட வேண்டும். பில் கொடுங்கள். நான் கட்டுகிறேன் என்று கூறினார். அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் பணம் எதுவும் கட்ட வேண்டாம். உங்கள் மருத்துவ செலவுகளை நானே கவனித்துக் கொள்கிறேன் என்று அன்புடன் கூறினார்.

அந்த முதியவருக்கு சந்தேகம் மேலிட எதற்கு டாக்டர் என்னுடைய செலவை நீங்கள் கட்ட வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த மருத்துவர் நான் மிகவும் தாகத்தில் தவித்த பொழுது, எனக்கு மோர் கொடுத்து என் தாகத்தை தீர்த்தீர்கள். அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். ஆதலால் அந்த நன்றிக் கடனை அடைக்க எனக்கு இது ஒரு வாய்ப்பு. ஆதலால் நீங்கள் வீட்டுக்கு கிளம்புகள் என்று கூறினார். அந்த மருத்துவரின் நன்றி மறவாத தன்மையை நினைத்து முதியவரும் கையெடுத்து வணங்கி அவருக்கு நன்றியையும் தன் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார்.

தோல்வி என்பது முற்றுப்புள்ளியல்ல, வெற்றியின் ஆரம்பப்புள்ளி!

இன்றும் கிராமத்தில் இருக்கும் பழக்கம் இதுதான். வீட்டிற்கு தெரிந்தவர் தெரியாதவர் என்று யாராவது வந்துவிட்டால் முதலில் அவர்கள் கொண்டு வந்து கொடுப்பது மோரைத்தான்.

அதைத்தான் அன்று அவருக்கும் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு அந்த மருத்துவர் காட்டிய நன்றிக் கடனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு மனிதனை மேன்மைப்படுத்துவது நன்றி உணர்வுதான். நாமும் இப்படி எந்த விதத்தில் எல்லாம் மற்றவர்களுக்கு உதவ முடியுமோ அப்படியெல்லாம் உதவுவதற்கு தயங்கக் கூடாது. நமக்கு உதவியவர்களையும் மறக்காமல் நாம் நன்றி தெரிவித்து என்றும் நன்றி உடையவர்களாக திகழ்வோமாக!

நன்றி மறவாத நல்ல மனம் போதும்

என்றும் அதுவே நம் மூலதனம் ஆகும்; ஆகட்டும்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online