Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தேதி மற்றும் முக்கிய விவரங்கள்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: தேதி மற்றும் முக்கிய விவரங்கள்...

Kalki Online 5 days ago

துரையின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் (Madurai Meenakshi Sundareswarar Temple) உலகப் புகழ்பெற்ற திராவிடக் கட்டடக் கலை மற்றும் ஆன்மீகச் சிறப்புமிக்க ஆலயமாகும்.

15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது.

இச்சிவன் கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். பொதுவாக பக்தர்கள் இக்கோவிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றே அழைக்கின்றனர். இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களின் மூலக்கோவிலாக உள்ளது.

இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும். விநாயகரின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகவும், சிவபெருமான் மீது பாடப்பெற்ற தேவாரப்பாடல் பெற்ற 274-ஆவது சிவாலயமாகவும், 192-ஆவது தேவாரத்தலமாகவும் உள்ளது.

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர். இவர் சுயம்பு மூர்த்தியாவார். இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார். இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல்யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

இத்தலத்தில் முதல் பூஜை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது. அதன் பின்பே, மூலவரான சிவபெருமானுக்குப் பூஜைகள் செய்யப்படும். இதற்குக் காரணம், மீனாட்சியம்மன் பதிவிரதையாக இருந்து, எப்போதுமே தன்னுடைய கணவருக்குத் தொண்டு செய்ய எண்ணியுள்ளார். அதனால், கணவரை எழுப்பும் முன்பே, மனைவியான அம்பிகை, அபிஷேகத்தினை முடித்துத் தயாராகிறாள். இதனால், காலையில் முதல் பூஜை, மீனாட்சி அம்மனுக்குச் செய்யப்படுவதாக ஐதீகம். இத்தலத்தில் தரப்படுகின்ற பிரசாதமான தாழம்பூ குங்குமம், பிரசித்தி பெற்றதாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேம் வருகிற செப்டம்பர் 17-ம்தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இறுதியாக இக்கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதைத் தொடர்ந்து, தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 17-ம்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதையொட்டி கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 415-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.

 யாகசாலை பூஜைகள்

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் 6-ம்தேதி தொடங்கி உள்ள நிலையில் வரும் 11-ம்தேதி வரை இந்த பூஜைகள் நடக்க உள்ளது.

மேலும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 6-ம்தேதி தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் 2-ம்தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. 6-ம்தேதி முதல் வரும் 16-ம்தேதி வரை கும்பாபிஷேக விழாவுக்கான யாகசாலை பூஜைகளும், 16-ம்தேதி பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகமும், தீபாரானை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. மேலும் கலசங்களில் புனித நீர் நிரப்புவதற்காக புண்ணிய நதியான கங்கையில் இருந்து 1,008 லிட்டர் புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 17-ம்தேதி காலை 7.40 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் பெருவிழா நடக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் தனி சிறப்பு என்ன தெரியுமா?

பின்னர் 18-ம்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மண்டல பூஜைகள் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 11-ம்தேதி முதல் 16-ந்தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் தரிசனம் செய்ய இயலாது. அந்த நாட்களில் மூலவர் சன்னதியில் திருப்பணிகள் தீவிரமாக மேற்கொண்டு சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்படும். எனவே அந்த நாட்களில் சுவாமி, அம்மனை தரிசிக்க முடியாது என்றும் கும்பாபிஷேக தினத்தன்று அதாவது செப்டம்பர்17-ம்தேதி தான் அம்மன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி, திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக மாநகராட்சியின் மூலம் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த 58 இடங்களில் வாகன நிறுத்த வசதிகளும், கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவீன சிசிடிவி கண்காணிப்பு அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் கவனத்திற்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 6 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

அதுமட்டுமின்றி மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online