Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நடிகர் கார்த்தியின் 'உழவன் ஃபவுண்டேஷன்'!

நடிகர் கார்த்தியின் 'உழவன் ஃபவுண்டேஷன்'!

Kalki Online 3 years ago

விவசாயத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உழவர்களை கௌரவப்படுத்தும் நோக்குடனும், தற்சார்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்களாக உழவர்களை உருவாக்கவும், 'உழவன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடிகர் கார்த்தி ஆரம்பித்திருக்கிறார்..

உழவுக்காகப் பல்வேறு செயல்திட்டங்களை உருவாக்கி இயங்கிவரும் உழவன் ஃபவுண்டேஷன், முதன் முதலில் கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளைக் கண்டறிந்து ஆதரவுக் கரம் நீட்டியது. பல நீர் ஆதாரங்களைச் சீரமைக்கத் துணைநின்றதோடு சுற்றுச்சூழலை மேம்படுத்தத் தேவையான செயல்திட்டங்களையும் தீட்டி வருகிறது.

நம் வாழ்க்கையோடு கலந்திருந்த ஏராளமான நாட்டு விதைகள் இன்று வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மீட்டுருவாக்கம் செய்து பரவலாக்கும் விவசாயிகள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்களது பணிகள் மேலும் தொய்வின்றி நடக்க ஊக்கத் தொகை அளித்துவருகிறது. சிறு குறு விவசாயிகளுக்குப் பயன்படும் கருவிகளை வடிவமைக்கும் போட்டியையும் மாநில அளவில் நடத்தி வருகிறது. அதோடு ஆண்டுதோறும் உழவர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தி வருகிறது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறந்த விற்பனை உத்திகளைக் கையாளும் விவசாயிகள், வெற்றிகரமாக இயங்கும் பெண் விவசாயிகள், பார்வை சவால் உள்ள மாற்றுத் திறனாளிகள், விவசாயத்தை பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் மாற்றுப்பள்ளிகள், படித்துக்ககொண்டே விவசாயத்திலும் தீவிரம் காட்டும் மாணவர்கள் என வேளாண்மையை நேசிக்கும் மக்களைக் கண்டறிந்து ஊக்கத்தொகை அளித்து வருகிறது உழவர் பவுண்டேஷன்.

விவசாயத்திற்காகப் பல்வேறு வகைகளில் மாபெரும் பங்களித்து வருபவர்களை கெளரவப்படுத்தி அங்கிகரீக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் 'உழவர் விருதுகள் - 2023' விழா, ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மதியம் 4.30 மணியளவில் தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சாதனையாளர்களுக்கு உழவர் விருது மற்றும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

இதில் கால்நடை துறையில் சிறந்த பங்களிப்புக்கான விருது திரு.வெற்றிவேல் அவர்களுக்கும், சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான விருது கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவுக் குழுவிற்கும், மரபு விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கத்திற்கான விருது திரு.சண்முகசுந்தரம் அவர்களுக்கும், சிறந்த வேளாண் பங்களிப்புக்கான விருது வானகம் ரமேஷ் அவர்களுக்கும், சிறந்த வேளாண் ஆர்வலருக்கான விருது திரு. தினேஷ்குமாருக்கு அவர்களுக்கும், வழங்கப்பட்டது.

இந்த விழாவில் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, ஓவியர் மற்றும் நடிகர் சிவகுமார், நடிகர் ராஜ்கிரண், நடிகர் பொன்வண்ணன் இயக்குனர் பாண்டிராஜ், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் கு.சிவராமன், மற்றும் சூழலியலாளர் அனந்து ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online