Dailyhunt
ஞானிக்கு பாடம் கற்பித்த நாய்!  இந்த ஒரு ரகசியம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையும் மாறும்!

ஞானிக்கு பாடம் கற்பித்த நாய்! இந்த ஒரு ரகசியம் தெரிந்தால் உங்கள் வாழ்க்கையும் மாறும்!

Kalki Online 1 week ago

முன்னொரு காலத்தில் ஒரு மிகப்பெரிய ஞானி இருந்தாராம். அவர் ஊர் ஊராகச் சென்று அங்கிருக்கும் மக்களுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதையும், அவர்களை நல்வழிப்படுத்துவதையும் தன் கடமையாக வைத்திருந்தார்.

அப்படி ஒருநாள் அவர் ஒரு ஊருக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, "ஐயா! உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் கிடைத்தது?" என்று கேட்டார்.

அதற்கு அந்த ஞானி, "அதற்கு ஒரு நாய்தான் காரணம்" என்று இயல்பாகக் கூறினார். பிறகு, அவர் நடந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தார்:

"ஒருநாள் நான் குளக்கரையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது தாகத்துடன் ஒரு நாய், நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு ஓடிவந்தது. குளத்தில் இருக்கும் தண்ணீரைக் பார்த்ததும் அந்த நாய்க்கு அவ்வளவு சந்தோஷம்! அவசர அவசரமாகத் தண்ணீரைக் குடிக்கச் சென்ற நாய், சட்டென்று பின்வாங்கி ஓடி வந்து குளத்தைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தது. பிறகு மறுபடியும் தண்ணீர் குடிக்க அருகில் சென்றது; மீண்டும் பின்வாங்கியது; மறுபடியும் குறைக்க ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் அந்த நாயால் தாகத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இந்தமுறை மிகவும் வேகமாகவும், துணிச்சலாகவும் சென்று குளத்தில் குதித்துத் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தது. தண்ணீரைக் குடித்த பிறகுதான் அந்த நாய்க்குத் தெரிந்தது - இதுவரை தண்ணீரில் பார்த்து தான் குறைத்துக் கொண்டிருந்தது தன்னுடைய பிம்பத்தைத்தான் என்று!

அந்த நாய் தண்ணீரில் கண்ட உருவம் அதன் எதிரி அல்ல; அது அதன் சொந்த பிம்பம் தான். அதுபோலவே, நம் இலக்கை அடைய விடாமல் தடுக்கும் பல தடைகள் நிஜமானவை அல்ல; அவை நம் மனதிற்குள் நாமே உருவாக்கி வைத்திருக்கும் அச்சத்தின் பிம்பங்கள் மட்டுமே. நாம் அந்தத் தடையை நோக்கித் துணிச்சலாக அடி எடுத்து வைக்கும்போது, அந்தப் பயம் தானாகவே மறைந்துவிடும்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பிறகுதான் எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது. நான் முன்னேறாமல் இருப்பதற்கும், நான் வேண்டியதை அடையாமல் இருப்பதற்கும் வேறு புறக்காரணம் எதுவும் இல்லை; அதற்கு முழுக்க முழுக்க நானே தான் காரணம் என்பது எனக்குப் புரிந்தது.

'எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால்தான் நான் வெற்றி பெறவில்லை', 'எனக்குச் சரியான சூழ்நிலை அமையவில்லை, அதனால்தான் இப்படி நடந்துகொண்டேன்', 'அவன் எனக்கு இப்படிச் செய்தான், அதனால்தான் நான் அவனுக்கு இதைச் செய்தேன்' என்று ஒவ்வொன்றிற்கும் சூழ்நிலையைக் குறை சொல்லிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, நம்மிடம் என்ன தவறு இருக்கிறது என்று யோசித்தால் எல்லாமே மாறும்."

வாழாமல் உழைப்பவரா நீங்கள்? ஓடி ஓடி சம்பாதிக்கும் முன் இதை ஒருமுறை படியுங்கள்!

சுழ்நிலைகளையும் மற்றவர்களையும் குறை சொல்வது ஒரு தற்காப்பு மனநிலை. ஆனால், "என் தோல்விக்கு நான் தான் காரணம்" என்று உணரும் தருணம்தான் ஒருவர் வெற்றியாளராக மாறும் தருணம். தன் தவறை ஒப்புக்கொள்பவனே திருத்திக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறான்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online