பொதுவாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலோ, சுவாசிக்க வேண்டும் என்றாலோ நாம் வாயையும் மூக்கையும் தான் பயன்படுத்துவோம்.
ஆனால் இயற்கையின் படைப்பில் பல விசித்திரங்கள் நிறைந்துள்ளன. அதில் ஒன்றுதான் தவளைகள். இவை மனிதர்களைப் போல தங்களது நுரையீரலை மட்டுமே நம்பி இருப்பதில்லை.
அதற்குப் பதிலாக தங்களது உடம்பில் உள்ள தோலின் வழியாகவே சுவாசிப்பதும் தண்ணீர் குடிப்பதும் என பல விசித்திர செயல்களை செய்கின்றன. இது எப்படி சாத்தியமாகிறது மற்றும் இதனால் அவற்றுக்கு என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தோலின் வழியே நடக்கும் அதிசயம்!
தவளைகளின் தோல் பகுதி மிகவும் மெல்லியதாகவும், எப்போதும் ஒருவிதமான ஈரப்பதத்துடனும் இருக்கும். இதன் உள்ளே மிக நுண்ணிய துளைகள் இருப்பதோடு, தோலுக்கு அடியிலேயே ஏராளமான ரத்த நாளங்கள் வலை போலப் பரவியிருக்கும். இதை வைத்து அவை காற்றில் அல்லது தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை நேரடியாக உறிஞ்சிக் கொள்கின்றன. அதே சமயம், உடம்பில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி விடுகின்றன.
இந்த அட்டகாசமான செயல்பாட்டைத் தான் Cutaneous respiration என்று University of Connecticut-ஐச் சேர்ந்த உயிரியல் நிபுணரான ஒருவர் கூறுகிறார். இது கிட்டத்தட்ட நமது நுரையீரல் செயல்படும் அதே முறைதான். அதேபோல அவை தண்ணீர் குடிப்பதற்கும் வாயைப் பயன்படுத்துவதில்லை. தங்களது தோலின் அடிப்பகுதி வழியாகவே தங்களுக்குத் தேவையான மொத்த தண்ணீரையும் மிக எளிதாக உறிஞ்சிக் கொள்கின்றன.
பாலைவனத் தவளைகள்!
ஆஸ்திரேலியா போன்ற வெப்பமான பாலைவனப் பகுதிகளில் வாழும் சில தவளைகள் ரொம்பவே ஸ்மார்ட்டானவை. மழை பெய்யும் போது தங்களுக்குத் தேவையான தண்ணீரை உடம்புக்குள் அதிகமாகச் சேமித்து வைத்துக்கொண்டு, பூமிக்கடியில் ரொம்ப ஆழமாகச் சென்று ஒரு சளி போன்ற படலத்தால் தங்களை முழுமையாக மூடிக்கொள்ளும்.
அடுத்த மழை வரும் வரை பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட அந்த சேமித்த நீரை வைத்துக்கொண்டே அவை உயிரோடு இருக்கும். இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தவளைக் குஞ்சுகளுக்கு செவுள்கள் முழுமையாக வளர்ந்திருக்காது. எனவே நீரின் மேற்பரப்புக்கு வந்து மிகச் சிறிய காற்று குமிழிகளை உருவாக்கி, அதைத் தங்களது நுரையீரலுக்குள் தள்ளிக் கொண்டு அவை சுவாசிக்கும்.
வரப்போகும் மாபெரும் ஆபத்து!
இப்படி தோலின் வழியாக அனைத்தையும் உறிஞ்சும் ஸ்பெஷலான பழக்கம் தவளைகளுக்கு ஒரு வகையில் மிகப்பெரிய ஆபத்தாகவே முடிந்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் தண்ணீரில் கலக்கும் கமர்ஷியல் ரசாயனங்கள் மற்றும் மைக்ரோ பிளாஸ்டிக் போன்றவை மிக எளிதாக இவற்றின் உடலுக்குள் சென்றுவிடுகின்றன. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் கடுமையான வறட்சியால், பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள அமேசான் போன்ற காடுகளில் உள்ள தவளைகளின் வாழ்விடங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன.
காடுகளில் தவளைகள் அழியத் தொடங்கினால், அங்குள்ள ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். இவை அழிந்தால் பூச்சிகளின் எண்ணிக்கை பலமடங்கு பெருகிவிடும், அதே சமயம் இவற்றை நம்பி வாழும் பாம்புகள் மற்றும் பறவைகளும் உணவில்லாமல் அழியும் இக்கட்டான நிலை ஏற்படும்.
காலநிலை மாற்றத்தின் உண்மைக் காரணங்கள் மற்றும் அதிர்ச்சி விளைவுகள்!காலநிலை மாற்றம், விலங்குகள் தங்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதை விட மிக அதிவேகமாக நடந்து கொண்டு இருக்கிறது.

