Dailyhunt
சந்தோஷத்தை கொடுப்பது எது தெரியுமா?

சந்தோஷத்தை கொடுப்பது எது தெரியுமா?

Kalki Online 1 year ago

ப்பொழுதும் எல்லோராலும் எல்லாவற்றையும் மிகச்சரியாக செய்துவிட முடியாது. அதற்காக செய்யவேண்டிய எதையும் செய்யாமலும் இருக்க முடியாது.

சில நேரங்களில் சில விஷயங்கள் எதிர்பார்க்காததை விட மிகவும் நன்றாக செய்துவிட முடியும். சில சமயங்களில் எவ்வளவுதான் நன்றாக செய்யவேண்டும் என்று முயற்சி எடுத்தாலும் அதில் சற்று குறைபாடு இருக்கத்தான் செய்யும். அதற்காக கவலைப்பட்டு வருந்த வேண்டியது இல்லை.

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் எல்லோரும் தங்களுக்கு எல்லாம் சரியாக நடக்கிறது என்ற நினைப்பில் மகிழ்ச்சியாக இல்லை. வாழ்வில் எதையும் சரியாக எதிர்கொள்ள முடியும். இன்று இல்லை என்றாலும் நாளை என்று ஒன்று இருக்கிறது அப்பொழுதாவது எதையும் சரியாக எதிர்கொண்டு விடலாம் என்ற நினைப்பில்தான் சந்தோசமாக இருக்கிறார்கள்.

அப்படித்தான் எனது தோழிக்கு ஒரு வருத்தம் எப்பொழுதும் உண்டு. எல்லா வசதியும் நிரம்பப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவள். புகுந்த வீடும் அப்படித்தான். என்றாலும், இஷ்டம்போல் செலவு செய்ய முடியவில்லை என்று வருத்துவாள். தன் கையில் பணத்தை வைத்து என் இஷ்டம்போல் செலவழிக்க வேண்டும் என்று ஆசை.

தடங்கல்களைக் கண்டு தளராதீர்கள்..!

ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர்கள் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுப்பது இல்லை. இத்தனைக்கும் காசு பணத்திற்கும் குறைவில்லை. வேண்டியளவு பணத்தை என் கையில் கொடுத்தாலும், என் கூட வருபவர்கள் அவர்களாகவே எனக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து, உனக்கு வேறு ஏதாவது விருப்பமா என்று கூட கேட்காமல் அழைத்து வந்து விடுகிறார்கள். இதை எப்படிச் சொன்னாலும் அவர்களுக்குப் புரியவைக்க முடியவில்லை. மீறி பேசி எதிர்வினை ஆற்றினாலும் வம்புதான். அதற்காக பயந்து வாய் திறப்பதே இல்லை என்று ஆதங்கப்பட்டாள்.

மேலும், நானும் அந்த நேரத்தில் மதி மயங்கி விடுகிறேன் என்று தான் நினைக்கிறேன். திருமணம் ஆனதிலிருந்து ஒரு பிரச்னையை மேற்கொள்வதை விட அதற்கு நாம் வெளிப்படுத்தும் எதிர்த்து பேசும் பேச்சே நம்மை எப்போதும் துன்பத்தில் தள்ளுகிறது. எதற்கும் எதிர் வினை நிகழ்த்தி எரிச்சலை வெளிப்படுத்தாமல் ஏற்றுக்கொண்டால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து விடலாம். அந்த நேர தூண்டுதலுக்கு மயங்கி எதிர்ப்பு நிகழ்த்தாமல் ஆழ்ந்து யோசித்து எதையும் செய்தால் எப்போதும் சந்தோஷமாக இருக்கலாம்.

வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆதலால் எதற்கும் எதிர்த்து பேசி கெட்ட பெயர் வாங்காமல் இருப்பதே நல்லது. அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்தேன். அப்படியே நடக்கும் பொழுது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. என்றாலும் ,நாம் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என்று வருத்தமாகவும் இருக்கிறது என்று கூறினாள்.

இதுபோல் பல பெண்கள் கூறுவதை கேட்க முடியும். இன்னும் பெண்ணை பெற்றவர்கள் பெண்களை இதுபோல் அடக்கி ஒடுக்கி இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியதாலும் இது போன்ற பண்பு நம்மிடம் தொற்றிக் கொள்கிறது. எதிர் வினைக்குப் பயந்து வாய் அடைத்து கிடக்கும் பெண்கள் நாட்டில் ஏராளம் உண்டு.

காலம் உயிருக்குச் சமம்!

இதற்கு எல்லா சூழல்களிலும் உடனடியாக ஒரு முடிவு எடுத்து ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும் என்பது அவசியமே இல்லை. அந்தச் சூழலை இனிமையாக்க என்ன செய்யலாம் என்பதை யோசித்தால் நம்மிடம் இருந்து வெறுப்பு வார்த்தைகள் வெளிவராது. எதையும் எதிர்க்க வேண்டாம். இவர்கள் இப்படித்தான் என ஏற்றுக்கொள்ளுங்கள். என்றாலும் அவகாசம் கிடைக்கும் பொழுது தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்துங்கள். மனமகிழ்ச்சிக்கு எப்போதும் குறைவிருக்காது.

கடல் பெரியதுதான் என்றாலும் சந்தோஷங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள்தான். ஆதலால் எதிர்ப்பை அகற்றி மனதை செம்மையாக்கி மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online