Dailyhunt
செயல்படாத PF கணக்குகளை முறைப்படுத்தும் வழிமுறைகள் இதோ!

செயல்படாத PF கணக்குகளை முறைப்படுத்தும் வழிமுறைகள் இதோ!

Kalki Online 1 year ago

தொழிலாளர்கள் பலரும் தங்களின் PF கணக்கு குறித்து தெளிவான விழிப்புணர்வுடன் இல்லை. இதனாலேயே பல கணக்குகள் செயலற்று போகின்றன.

இவை பல மோசடிகள் நடக்கவும் வழிவகுக்கின்றன. இந்த மோசடிகளைத் தடுக்க செயலற்ற கணக்குகளை எப்படி செயலுக்கு கொண்டு வருவது என்பதைப் பார்ப்போம்.

நாட்டில் உள்ள மாதச் சம்பளக்காரர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம். இத்திட்டத்தின் படி, தொழிலாளரும், நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை தொழிலாளரின் பெயரில் வரவு வைப்பார்கள். இந்தத் தொகை தொழிலாளர்களின் அவசர காலங்களில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இதுதவிர ஓய்வு காலத்தில் பென்சன் கிடைப்பதையும் உறுதி செய்கிறது. இந்த நிலையில் சில செயல்படாத PF கணக்குகளில் முறைகேடான வகையில் திருட்டு நடைபெறுவதைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு சில வழிமுறைகளை வகுத்துள்ளது.

தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு எந்தவித பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால் அவரது PF கணக்கு செயலற்றதாக கருதப்படும். இப்படி செயலற்று இருக்கும் கணக்கில் தான் போலியான ஆவணங்களை சமர்பித்து முறைகேடுகளில் சிலர் ஈடுபடுகின்றனர். ஒரு தொழிலாளர் ஓய்வு பெற்று விட்டாலோ அல்லது வேலையைத் துறந்து விட்டாலோ முறைப்படி PF பணத்தை எடுக்க விண்ணப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தங்களது கணக்கை செயலில் வைத்துக் கொள்ளவும், பணத்தை எடுக்கவும் சில வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

PF கணக்கின் உரிமையாளர் தனது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். முதலில் உங்கள் கணக்கிற்கு UAN எண் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த எண் இல்லையெனில் EPFO அலுவலகத்திற்கு நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். அலுவலர் UAN உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் எண், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கைக் கொண்டு KYC செய்து முடிக்க வேண்டும்.

PF பென்சன் பணத்தை எடுக்க வேண்டுமா? விதிமுறைகள் இதோ!

இதன்பிறகு தங்களது கணக்கை செயலுக்கு கொண்டு வர விண்ணப்பிக்கலாம். நேரில் செல்ல முடியாத பயனாளர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் நேரில் வந்து தகவல்களை சரிபார்த்து விட்டு, செயலற்ற கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான படிகளை மேற்கொள்வார். பணி செய்த நிறுவனத்தில் செயலில் இருக்கும் UAN உள்ளிட்ட விவரங்களையும் இந்த அலுவலர் சரிபார்ப்பார்.

ஏற்கனவே UAN எண் இருந்து KYC முடிக்கப்பட்ட கணக்கின் உரிமையாளர்கள், தங்களின் கணக்கை செயலுக்கு கொண்டு வர ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஒருவேளை PF கணக்கின் உரிமையாளர் இறந்து விட்டால், அவருடைய நாமினி ஆன்லைனில் விண்ணப்பித்து மீதமிருக்கும் பணத்தை எடுக்கலாம். மேற்கண்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் முறைகேடான பரிவர்த்தனையைத் தடுப்பதோடு, PF கணக்குகளை செயலிலும் வைத்துக் கொள்ள முடியும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online