Dailyhunt
சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?

சிக்ஸ் அடிச்சா அவுட்! எந்த நாட்டில் தெரியுமா?

Kalki Online 1 year ago

புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால் தான் கிரிக்கெட் சுவாரசியமாக இருக்கும் என்று பலர் கருதுகின்றனர். அவ்வகையில் சிக்ஸ் அடித்தாலே அவுட் என்ற பழங்கால விதிமுறையை அமல்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் உள்ள ஒரு பழமையான கிரிக்கெட் கிளப்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

கிரிக்கெட் விளையாட்டில் அவ்வப்போது புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. அதில் சிலவற்றை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் சில விதிகளை எதிர்க்கவும் செய்வார்கள். அவ்வகையில், ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதிமுறை கூட பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. இந்த விதிமுறையால் ஆல்ரவுண்டர்களின் திறமை வீணடிக்கப்படுவதாகவும், பலருக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஒரு புதிய விதிமுறை கிரிக்கெட்டில் அமல்படுத்தப்படும் போது, அது உடனே அமுலுக்கு வருவதில்லை. பலருடைய ஆலோசனைகளைக் கேட்டு ஆராய்ந்த பிறகு தான் அமலாகிறது. அவ்வகையில் தான் இங்கிலாந்தில் உள்ள பழமையான சவுத்விக் & ஷோர்ஹாம் என்ற கிரிக்கெட் கிளப் பழங்கால விதிமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பழங்கால விதிமுறையின் படி, கிளப் கிரிக்கெட் விளையாடும் ஒரு வீரர் பந்தை தூக்கி அடித்தால் அவுட்டானதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பழங்கால விதிமுறை ஒன்று மீண்டும் வந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

கிளப் கிரிக்கெட் விளையாடும் போது பந்தை தூக்கி அடிப்பதால், அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளின் கண்ணாடி உடைந்து விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனைத் தடுக்கும் விதமாகத் தான் இப்போது பழங்கால விதிமுறை மீண்டும் முளைத்துள்ளது. இதன்படி கிரிக்கெட் வீரர் ஒருமுறை பந்தை தூக்கி சிக்ஸருக்கு அடித்தால், அது ரன்னாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இரண்டாவது முறை மீண்டும் தூக்கி அடித்தால் அவுட் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம் விதிமுறைக்கு கட்டுப்பட்டு வீரர்களும் தூக்கி அடிக்காமல் இருப்பார்கள். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க முடியும் என்று கிளப் நம்புகிறது.

தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு தருவாரா கவுதம் கம்பீர்?

இந்தத் தகவலைக் கேட்ட பின்பு, கிராமங்களில் நாம் எல்லோரும் கிரிக்கெட் விளையாடும் போது தூக்கி அடித்தால் அவுட் என்று விளையாடுவோமே அது தான் நினைவுக்கு வருகிறது. விளையாடுவதற்கு சரியான மைதானம் இல்லாத சூழலில், இது மாதிரித் தான் பலரும் அன்றைய நாட்களில் விளையாடி வந்தனர். இன்றும் கூட சில இடங்களில் சிறுவர்களும், இளைஞர்களும் பொழுதுபோக்கிற்காக இந்த விதிமுறையைக் கொண்டு தான் விளையாடி வருகின்றனர்.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்திலேயே இந்த விதிமுறை அமலாகி இருப்பது வேடிக்கையாக உள்ளது. இந்தத் தகவலைக் கேட்ட பின்பு உங்களின் சிறுவயது கிரிக்கெட் நினைவுகள் ஞாபகத்திற்கு வருகிறதா! அப்படி எனில் அந்த நினைவுகள் என்ன என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online