Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திணிக்கப்படும் சீரியல்கள்! அந்தோ பரிதாபம்!

திணிக்கப்படும் சீரியல்கள்! அந்தோ பரிதாபம்!

Kalki Online 1 year ago

டி.வி.,சீரியல்கள் எல்லோருக்கும் என்டர்டைன்மெண்ட் வழங்கி வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. 55 அங்குல டிவியிலிருந்து கைக்குள் அடங்கும் மொபைலிலுங்கூட அவை செயல்பட ஆரம்பித்து விட்டதால் பார்ப்போர் எண்ணிக்கை பலமடங்கு கூடி விட்டது.

அதனால்தானோ அவற்றில் அபத்தங்களும் அதிகரித்து விட்டன?!

மெகா சீரியல்கள் என்ற பெயரில், ஆயிரக்கணக்கில் எபிசோட்களைக் கொடுத்து வரலாறு படைப்பதாக எண்ணிக்கொண்டு, ஆர்டினரி மக்களின் மீது அவற்றைத் திணித்து வருகிறார்கள் என்பதே நிதர்சனம். கலை நிகழ்ச்சிகள் அனைத்துமே மனிதர்களை இன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு நல்வழி காட்டுவனவாகவும் அமையவேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் பெரும்பாலான சீரியல்களின் கதைக் கருக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாகவும், ஏளனம் செய்யக் கூடியவையாகவும் உள்ளன.

உதாரணத்திற்கு ஒன்று! ஒரு பிரபல சீரியலில் வில்லனாக உருவகப்படுத்தப்படும் டாக்டர், அதே மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றும் கதாநாயகிக்குத் தீங்கிழைக்க முற்பட்டு சிக்கிக் கொள்வதால், அவர் அதே மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக ஆக்கப்படுகிறாராம். அப்புறம் மீண்டும் சீப் டாக்டர் பதவிக்கு உயர்த்தப்படுகிறாராம். போதுண்டா சாமி! இவர்கள் கதையமைப்பும்!காட்சியமைப்பும்!

அதோடு மட்டுமல்ல, பல சிரமங்களுக்குப் பிறகு, நாயகிக்குத் திருமணம் நடைபெறுகிறது. பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அத்தோடு சீரியல் முடிந்து விடும் என்பதுதான்! அதன் பிறகு சின்ன வயசுக் காதலன் வருகிறானாம்! அப்புறம், பெரியப்பா திருந்த, பிரியம் காட்டிய உறவினர் முறுக்கிக் கொள்ளவென்று கதைக்களம் மாற, 'மறுபடியும் முதல்ல இருந்தா?'என்ற வெறுப்புத்தான் மேலோங்குகிறது. (நான் சீரியல்களின் பெயர்களைக் குறிப்பிடப் போவதில்லை! அவற்றை நீங்களே எளிதாக யூகித்துக் கொள்ளலாம்!)

இந்த வாரம் டாப் 4 இடங்களை பிடித்த சீரியல்கள்.. மீண்டும் முதலிடத்தில் பிரபல சீரியல்!

மதிய சீரியல் ஒன்று! இரண்டு மருமகள்களில் மூத்தவள் தாயுடன் சேர்ந்து கொண்டு பணக்கார இரண்டாவது மருமகளின் தந்தையைக் கொல்லத் திட்டம் தீட்டிச் செயல் படுத்தவும் செய்கிறாள்! ஆனால் இரண்டாவது மருமகளோ குடும்ப ஒற்றுமைக்காக என்ன நடந்தாலும் சகித்துக் கொள்கிறாளாம்! ஒரு கட்டம் வரைதான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியும்! நாயகியின் செயல்கள் நமது பொறுமையை ரொம்பவும் சோதித்து, வெறுப்படையவே செய்கிறது!

சமீப கால அனைத்து சீரியல்களிலும் பெண்கள் மட்டுமே புத்திசாலிகளாகவும்,முடிவு எடுப்பவர்களாகவும் ஒரு பக்கம் காட்டி விட்டு, அவர்களையே வில்லத்தனம் செய்யும் மோசமானவர்களாகவும் காட்டப்படுவது, எங்கோ இடிக்கிறது!

பெரும்பாலான சீரியல்களில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு அநீதிக்குத் துணை போவதாகக் காட்டப்படுகின்றனர். ஒன்றிரண்டு முறை என்றால் சரி! என்று விட்டு விடலாம்! பல சீரியல்களில் காசை வாங்கிய காரணத்தால், ஒவ்வொரு முறையும் தான் செய்யும் செயல்களைக் காசு கொடுத்தவருக்கு மொபைலில் தெரிவிப்பதும், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமென்று அவர்களிடமே கேட்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே அல்ல.

சரிவில் விஜய் டிவி சீரியல்கள்... வந்தாச்சு TRP ரேட்டிங்... முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

காவல் துறையில் கருப்பு ஆடுகள் உண்டுதான்! அதற்காக அதையே பெரிது படுத்திக் காட்டுவதை எங்ஙணம் ஏற்பது? எத்தனையோ நல்ல காவலர்கள் சுய நலம் பாராது உழைப்பதால்தான் நம்மால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது!

இன்னொரு மதிய சீரியலில், மருத்துவர் காசுக்காக கர்ப்பம் தரிக்காத பெண்ணுக்குக் கர்ப்பிணி என்று சான்றிதழ் வழங்குகிறார்! எல்லாத்துறைகளிலுமே விதி விலக்குகளாகத் தவறு செய்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்! விதி விலக்குகளை விலக்கி வைப்பதே முறை! நல்ல கருத்துக்களை மக்களிடம் பரப்பும் விதமாகவே சீரியல்கள் அமைய வேண்டும்.

இப்பொழுது கல்வி நிலையங்களுக்கான விடுமுறை நேரம் வேறு! சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்குமான பொழுது போக்கு, டி.வி நிகழ்ச்சிகள்தான்!அதிலும் அடிக்கும் வெயிலில் 10 மணி முதல் 4 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்கச் சொல்கிறார்கள்! அவ்வாறான நேரத்தில் குடும்பத்தார் அனைவரும் பார்க்கும் விதமாகக் காட்சிகள் அமைந்தால்தான் சிறப்பாக இருக்கும்!

நமது முன்னோர்கள் 'அகம்' என்றும் 'புறம்' என்றும் வாழ்வை வகைப்படுத்தி வைத்தார்கள்! நமது டி.வி.,சீரியல்காரர்களோ அகத்தையும் புறமாக்கி, பார்ப்பவர்களை சங்கோஜத்திற்கு ஆளாக்குகிறார்கள்!

சிறுவர்களின் இசை நிகழ்ச்சி நடத்திப் பெரும் புகழ் ஈட்டும் ஒரு சேனலில், கணவன்-மனைவி சிறப்பு விருந்தினர்களாக வந்தார்கள்! இருவரும் மேடையில் மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டது, அனைவரையும் முகம் சுழிக்க வைத்ததே தவிர ரசிக்க வைக்கவில்லை! படுக்கை அறைக் காட்சிகளைத் தயவு செய்து நாகரீகம் என்ற பெயரில் பகிரங்கப் படுத்தி, ரசிகர்களைக் கூச்சப்பட வைக்காதீர்கள்! ப்ளீஸ்!

தினமும் குற்ற உணர்ச்சி தான்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஹேமா வருத்தம்!
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online