Dailyhunt
துன்பத்திலிருந்து விடுதலை: கனவு கலைந்தால் அமைதி!

துன்பத்திலிருந்து விடுதலை: கனவு கலைந்தால் அமைதி!

Kalki Online 7 months ago

ரு மனிதன் கனவு கண்டுகொண்டிருக்கிறான். அந்தச் சொப்பனத்தில் சிங்கம் ஒன்று அவனைத் துரத்துகிறது. அவன் ஓடுகிறான்.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறான். உயிர் பயத்தின் உச்ச நிலையில் நாடி நரம்புகளெல்லாம் அறுந்துவிழும் வேகத்தில் ஓடுகிறான். அவன் ஒடிக்கொண்டிருந்த அந்தப் பாதை திடீரென்று முடிவடைகிறது. அதற்கு அப்பால் அதல பாதாளம்... சிங்கம் அவனை நெருங்கிவிட்டது. அவன் கத்துகிறான். ஐயோ...!

இவ்வளவும் நடப்பது கனவில். கனவு கண்டு கொண்டிருக்கும் வரை அது கனவென்று தெரிவதில்லை. விழிப்பு நிலையில் ஒருதுன்பத்திற்கு ஒருவன் எவ்வளவு துடிப்பானோ, அதே துடிப்பு, அதே அளவிலான பரிதவிப்பு கனவிலும் அவனுக்கு அனுபவமாகும். கனவு என்பது, கனவு முடிவு பெறும்வரை நனவு போலவே தோன்றும் என்பதை எல்லா மனிதர்களும் நிச்சயம் அனுபவத்தில் உணர்ந்திருப்பார்கள்.

மனிதன் கனவில் சிங்கத்தைக் கண்டு அலறுகிறான். உண்மையில் அவனைச் சிங்கம் துரத்தவில்லை; அவனும் சிங்கத்திடமிருந்து தப்பிப்பதற்காக ஓடவில்லை. ஆனால், அப்படி அவனுக்குத் தோன்றுகிறது. உயிர் பயத்தை அனுபவித்து நடுநடுங்குகிறான்.

இந்தத் துன்ப நிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் அவன் கனவிலேயே அந்தச் சிங்கத்தை எதிர்த்து போராடலாம். கனவிலேயே பக்கத்தில் மரம் ஏதேனும் நிற்குமானால் அதில் ஏறித் தப்பிக்கலாம். அல்லது அந்தக் கனவிலேயே வேறு ஏதேனும் உபாயம் தென்பட்டால் அதன்மூலம் மீட்சி அடையலாம்.

ஆனால், இவை எல்லாவற்றையும்விடச் சிறந்த வழி ஒன்றிருக்கிறது. அவனது தூக்கம் கலைந்து விட்டதென்றால், விழிப்பு நிலையை அவன் அடைந்துவிட்டானென்றால், உடனே கனவும் இல்லாமல் போய்விடுகிறது. கனவில் கண்ட காடு, சிங்கம், அதல பாதாளம்... ஆகிய எல்லாம் மறைந்து விடுகின்றன. தனது துன்பத்திற்குக் காரணமாயிருந்தவையெல்லாம் கனவில் கண்ட வெறும் பொய்த்தோற்றங்கள்தான் என்பதை அந்த மனிதன் உணர்ந்ததும் அவன் நிம்மதி அடைகிறான். ஓர் அமைதிநிலை தானாக அவன் மனத்தில் வந்துவிடுகிறது.

நமது வாழ்க்கையும், இறைவன் வகுத்த நியதியும்!

தூக்கத்திலிருந்து விழித்துவிட்டால் எப்படிக் கனவுத் துன்பம் மறைந்து அமைதி தோன்றிவிடுகிறதோ அதைப் போலவே ஞான விழிப்புப் பெற்று இந்த வாழ்க்கையாகிய கனவு கலையப்பெற்றால் அதன்பின், 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்னும் பேரமைதி நிலை இயல்பாக விளங்கித் தோன்றத் தொடங்கி விடுகிறது.

ஆக. துன்பங்களிலிருந்து விடுதலை அடைவதற்கான சரியான வழி, துன்பத்தின் சுவடே இல்லாத இடைவிடாத சுகத்தில் லயித் திருப்பதற்கான ஒரே வழி, நாம் இப்போது கண்டுகொண்டிருக்கின்ற வாழ்வென்னும் கனவைக் கலைத்துவிடுவதுதான்.

இப்போது கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கின்ற யாவுமே நிஜமல்ல; வெறும் கனவுத்தோற்றங்கள்தான் என்னும் உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்துகொள்வது ஒன்றே எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரே மார்க்கம்.

அஞ்ஞானமாகிய தூக்கத்தில் மனிதன் கண்டு கொண்டிருக்கிற கனவுதான் இந்த உலகத்தோற்றமும் வாழ்க்கை நிகழ்வுகளும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online