Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வாடகை ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு மட்டும் போடப்படுவது ஏன் தெரியுமா?

வாடகை ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு மட்டும் போடப்படுவது ஏன் தெரியுமா?

Kalki Online 2 years ago

வாடகை ஒப்பந்தம் என்பது ஒரு சொத்தின் உரிமையாளருக்கும் அதை வாடகைக்கு எடுக்கும் குத்தகைக்காரருக்கும் இடையிலான சட்டபூர்வ ஆவணமாகும்.

பொதுவாக, லீசுக்கு வீடு எடுத்தால் 11 மாதங்களுக்கு ஒப்பந்தம் போடுவார்கள். வாடகைக்கு இருக்கும் நபர் நான்கைந்து ஆண்டுகள் அந்த வீட்டில் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் பதினொரு மாதத்திற்குதான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 17 பதிவு சட்டம் 1918ன்படி வாடகை ஒப்பந்தத்தின் காலம் என்பது ஓராண்டுக்கு கீழ் இருந்தால்தான் அதனை பதிவு செய்யத் தேவையில்லை. எனவேதான் இதுபோன்ற வாடகை ஒப்பந்தங்கள் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகின்றன. வாடகை ஒப்பந்தம் என்பது ஒரு சொத்தை வாடகைக்கு விடும்போது சொத்து உரிமையாளரால் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கொண்ட ஆவணமாகும். இது இரு தரப்பினருக்கும் இடையில் சட்ட உறவை வரையறுக்கும்.

11 மாத வாடகை ஒப்பந்தத்தில் சொத்தின் வாடகை, பராமரிப்பு, பாதுகாப்பு போன்ற சட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதை சட்டபூர்வ ஆவணமாக முன்வைத்து தங்கள் பிரச்னைக்கு விரைவான தீர்வைப் பெற ஆதாரமாகச் செயல்படும். இந்தியாவில் குத்தகைக்கு விடப்படும் வீட்டை காலி செய்வது மிகவும் கடினம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். இதை தவிர்ப்பதற்காகவே 11 மாதம் மட்டுமே குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அத்துடன், 11 மாதம் மட்டுமே ஒப்பந்தம் போடப்படுவதால் இந்த ஒப்பந்தப் பத்திரத்தை பதிவு செய்யாமல் கையொப்பமிடலாம். இதனால் முத்திரை கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முடிகிறது. இது வீட்டின் உரிமையாளர்களுக்கு பணத்தை மிச்சப்படுத்தலாம் என்ற வகையில் சாதகமாக உள்ளது.

மேலும், வாடகை கட்டுப்பாட்டு சட்டங்களின் சிக்கல்களில் சிக்காமல் வாடகைதாரர்களை எளிதாக வெளியேற்றலாம். இரு தரப்பிலும் ஏதேனும் அதிருப்தி ஏற்பட்டால் 11 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று அவர்கள் தேர்வு செய்யலாம். இந்தக் குறுகிய கால ஒப்பந்தத்தால் நில உரிமையாளர்களுக்கு வாடகை அல்லது பிற விதிமுறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும்.

வாடகை வருமான வரிக்கு உட்பட்ட வருமானமாகக் கருதப்படுகிறது. 11 மாத ஒப்பந்தத்தை வைத்திருப்பதன் மூலம் அது குறுகிய கால மூலதன சொத்தாக கருதப்படுவதால் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட வரிச் சலுகைகளுக்கு தகுதியுடையவராகிறார். குத்தகை காலாவதி ஆகும் முன் ஒரு குத்தகைதாரரை வெளியேற்ற முடியுமா என்றால், அந்தக் குத்தகைதாரர் வாடகை செலுத்தவில்லை என்றால் வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தொடங்க நில உரிமையாளருக்கு பொதுவாக உரிமை உண்டு.

மன அமைதியைக் கெடுக்கும் 9 விஷயங்கள் எவை தெரியுமா?

அதேபோல், குத்தகைதாரர் அங்கீகரிக்கப்படாத செல்லப் பிராணிகளை வைத்திருப்பது, அதிக சத்தத்தை ஏற்படுத்துதல் அல்லது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குத்தகையின் குறிப்பிட்ட விதிமுறைகளை மீறினால் நில உரிமையாளர் அவர்களை வெளியேற்றுவதற்கு உரிமை உண்டு. இதற்கு குத்தகைதாரருக்கு நில உரிமையாளர் மீறல் பற்றிய அறிவிப்பை வழங்குவதுடன் நிலைமையை சரி செய்ய ஒரு வாய்ப்பை வழங்கவும் வேண்டும்.

எந்தக் காரணமும் இன்றி நில உரிமையாளர் குத்தகைதாரரை ஒப்பந்தம் முடியும் முன்பு வெளியேற்ற முடியாது. வெளியேற்றத்திற்கான சரியான காரணங்களில் வாடகை செலுத்தாதது, குத்தகை மீறல்கள் அல்லது சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் ஒரு இடத்தை வாடகைக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில், ஒப்பந்தம் செய்து அதனை முறையாக பதிவு செய்வது இரு தரப்புக்குமே நல்லது என்கின்றனர் வழக்கறிஞர்கள். வாடகைக்கு குடியிருப்பவர் வீட்டின் மீது உரிமை கொண்டாடாமல் இருக்க வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்வதுடன், வீட்டை காலி செய்வது பற்றி எத்தனை நாட்களுக்கு முன் கூற வேண்டும் என்பதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்கின்றனர் வழக்கறிஞர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online