Dailyhunt
வாழ்வில் நேர்மையாக  இருந்தால் மட்டும் போதுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க!

வாழ்வில் நேர்மையாக இருந்தால் மட்டும் போதுமா?தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Kalki Online 1 year ago

ம்முடைய வாழ்வில் நேர்மையாக இருப்பது மட்டுமே நமக்கு வெற்றியைத் தேடி தந்துவிடுமா? எல்லோரிடமும் நேர்மையாகாவும், உண்மையாகவும் இருக்கும் குணம் நல்லதா?

அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு ஊரில் இரண்டு வைத்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதில் ஒருவர் நன்றாக படித்த திறமையான வைத்தியர். மற்றவரோ அரைகுறை வைத்தியர். இருந்தாலும் மக்களிடம் நன்றாக சமாளித்து பேசி நல்லப்பெயரை பெற்றுள்ளார்.

இப்படியிருக்கையில், அந்த நாட்டுக்கு ஒரு புது அரசவை வைத்தியர் தேவைப்பட்டார். உடனேயே அரசர் ஒரு அறிவிப்பை விடுத்தார். அந்த நாட்டில் இருக்கும் சிறந்த மருத்துவர்கள் அரசவைக்கு வந்து தங்களின் சிறப்பை சொல்ல சொன்னார். அதை வைத்து ஒரு சிறந்த மருத்துவரை தானே தேர்ந்தெடுப்பதாக கூறினார்.

திறமையான வைத்தியருக்கும் சரி, அரைகுறை வைத்தியருக்கும் சரி தான் தான் அந்த நாட்டின் அரச வைத்தியராக வேண்டும் என்ற ஆசை வந்தது. அடுத்த நாள் இருவருமே அரசவைக்கு வந்து விடுகின்றனர். அரசன் திறமைசாலி வைத்தியரிடமும், அரைகுறை வைத்தியரிடமும், 'உங்களின் சிறப்பு என்ன?' என்று கேட்டார். உடனே அரைகுறை வைத்தியர் முந்திக்கொண்டு, 'என்னால் எப்பேற்பட்ட கொடிய விஷத்தை யார் குடித்தாலும் ஒரு மணி நேரத்தில் குணமாக்கிவிட முடியும்' என்று கூறுகிறார். அரசவையில் உள்ள அனைவரும் இதைக் கேட்டதும் அரைகுறை வைத்தியர்தான் திறமைசாலி என்று நினைத்துக் கொள்கிறார்கள். இப்போது அரசர் திறமைசாலி வைத்தியரைப் பார்த்து, 'உன்னால் இது முடியுமா?' என்று கேட்கிறார்.

இந்த வைத்தியரால் மட்டுமில்லை. உலகத்தில் உள்ள எந்த வைத்தியராலும் கடுமையான விஷத்தை ஒரே மணி நேரத்தில் முறிக்க முடியாது என்று மனதில் நினைத்துக் கொண்டார் திறமைசாலி வைத்தியர். இருந்தாலும், அரசவையில் திறமைசாலி வைத்தியர் கூறுகிறார், 'அரசே! நான் அந்த வைத்தியர் போல திறமைசாலியில்லை. என்னிடம் ஒரு விஷம் இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் அவசரப்படுபவரா நீங்க? போச்சு!

அதில் இரண்டு சொட்டு சாப்பிட்டாலே இறந்து விடுவார்கள். இதை அவரை குடித்துவிட்டு அதற்கான மாற்று மருந்தையும் குடிக்க சொல்லுங்களேன். அவர் சொல்வது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்துக்கொள்ளலாம்' என்று திறமைசாலி வைத்தியர் கூறினார். இதைக்கேட்டதும் அரைகுறை வைத்தியருக்கு வியர்க்க ஆரம்பித்துவிட்டது. நாம் பேச்சுக்கு ஏதாவது சொல்லுவோம். யாராவது விஷத்தை குடித்துவிட்டு வந்து நம்மை பரிசோதிக்கவா போகிறார்கள் என்று நினைத்த அரைகுறை வைத்தியருக்கு பயங்கர ஷாக். அரசரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த கதையில் வந்தது போலத்தான், இந்தக் காலக்கட்டத்தில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் மட்டும் போதாது. அந்த உண்மையுடன் சமயோஜனை புத்தியும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online