Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
விதைக்கும் காலம் அறிந்து விதைப்போம்!

விதைக்கும் காலம் அறிந்து விதைப்போம்!

Kalki Online 1 year ago

ம்முடைய எதிரி யார் என்ற கேள்விக்கு, 'முயற்சி இல்லாத சோம்பலே நம்முடைய எதிரி' என்கிறார் ஆதிசங்கரர்.

சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. வேலை இருக்கும்போது அந்த வேலையைச் செய்ய விரும்பாமல் இருப்பதும், செய்யாமல் இருப்பதும்தான். சோம்பல் வேலை இல்லாத போதும், நல்ல பலனைத் தரக்கூடிய ஏதாவது ஒரு வேலையை எடுத்துக்கொண்டு அதைச் செய்ய முனையாமல் இருப்பதும் சோம்பல்தான்.

எந்த ஒரு உருப்படியான வேலையையும் செய்யாமல், சோம்பேறித்தனமாக, வெட்டிப்பேச்சிலும், கிண்டல் பேச்சிலும், அரசியல் சர்ச்சையிலும், தூக்கத்திலும் பொழுதை வீணே கழிப்பவனால் எந்த ஒரு உயர்ந்த நிலையையும் எட்டிப்பிடிக்க முடியாது.

ஒருவன் சோம்பேறித்தனமாக இருப்பது, தன்னைத்தானே கொலை செய்து கொள்வதற்கு ஈடாகும்' என்கிறார் செஸ்டர்பீல்ட்.

திரும்பத் திரும்ப வரும் பிரச்னைகளை நிவர்த்தி செய்வது எப்படி?

நாம் ஒரு நாள் பொழுதைச் சோம்பேறித்தனமாகக் கழித்துவிட்டால். நம்மைக் கேட்காமலேயே அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும். அதனால் எப்போதும் சுறுசுறுப்போடு ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

மின்மினிப்பூச்சி. சிறகை அடித்துப்பறக்கும் போதுதான் பளபளவென்று வெளிச்சம் வருகிறது. அதைப்போல் நாம் சுறுசுறுப்போடு செயலாற்றும் போதுதான் நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

சோம்பேறி யார் என்பதற்கு சாக்ரட்டீஸ் ஒரு அருமையான விளக்கத்தைத் தருகிறார்.

ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டுமல்ல சோம்பேறி, இப்போது செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறப்பாக வேலை செய்வதற்கு உரிய திறமையும் வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருக்கிறானே அவனும் சோம்பேறிதான்!'

இந்த வகையில் பார்க்கப் போனால் நம்மில் பலர் சோம்பேறிகளாகத்தான் இருக்கிறோம்.

ஓடுகின்ற ஒவ்வொரு நொடியும் உருப்படியாகக் கழியவேண்டும். நமக்கு நேரத்தை வீணாக்காமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனப்பான்மை இருந்துவிட்டால்போதும், நாம் வெற்றியின் அருகில் நெருங்கிவிட்டோம் என்றுதான் பொருள்.

உங்களிடமே இருக்கிறது ஒரு உற்சாக ஊற்று!

இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நாளைக்குத் தள்ளிப்போடக் கூடாது. இந்தப் பழக்கம் இன்றைக்கு சாப்பிட வேண்டியதை சேர்த்து நாளைக்கு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பது போன்றது.

நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே சோம்பலினால் ஏற்பட்டதுதான். நேரத்தை சோம்பேறித்தனமாகப் போக்குபவன் என்றைக்குமே முன்னேற முடியாது. ஒருவனின் அழிவினை வரவேற்பது இந்த சோம்பல்தான்.

சோம்பல் - அது நம்மிடம் விருந்தினர்போல்தான் வரும். நாம் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் நம்மிடம் நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும். விதைக்கும் காலத்தில் வீண்பொழுது கழித்தால் அறுவடை காலத்தில் நாம் அழவேண்டியிருக்கும்.

நடப்பது நடக்கட்டும்' என்பது சோம்பேறிகளின் தத்துவம். இப்படித்தான் இது நடக்க வேண்டும் என தோள்களைத் தட்டித் துடித்தெழ வேண்டும். சோம்பித் திரிந்தால் தேம்பித் திரிய வேண்டும். 'சோம்பேறிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது' என்பது ரஷ்ய நாட்டுப் பழமொழி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online