அமெரிக்காவில் ICE அதிகாரி துப்பாக்கியால் சுட்டதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளார்.
ICE அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு
செவ்வாய்க்கிழமை இரவு டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டனில் ICE படையின் வழக்கமான இரவு நேர போக்குவரத்து சோதனையின் போது மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த லோரென்சோ சல்காடோ அரெளஜோ(Lorenzo Salgado Araujo) அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவின்(ICE) அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ICE தரப்பு தெரிவித்துள்ள தகவலில், சல்காடோ அரெளஜோ தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக அதிகாரிகள் மீது வாகனத்தை ஏற்றியதாகவும், அதன் காரணமாகவே தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ICE தரப்பு விளக்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜூலியட் மார்டினெஸ் என்ற உள்ளூர்வாசி ஒருவர் பதிவு செய்த வீடியோவில், சல்காடோ அரெளஜோ பலத்த காயங்களுடன் கையில் விலங்கிடப்பட்டது பதிவாகியுள்ளது.
அதே நேரத்தில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

