மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அந்நாட்டு மக்களுக்கு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் அந்நாட்டு மக்களிடையே இரவு 7 மணியளவில் உரையாற்றினார்.
அதில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக சுட்டிக் காட்டினார்.
மேலும் இதனால் அவுஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்ந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த போர் நடவடிக்கையில் அவுஸ்திரேலியா நேரடி பங்குதாரர் இல்லையென்றாலும் இந்த போரின் ஏற்பட்டு வரும் சுமையை ஒவ்வொரு அவுஸ்திரேலிய குடிமகனும் சுமந்து வருவதாக பிரதமர் அல்பானிஸ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடம் கோரிக்கை
இந்நிலையில் பொதுமக்கள் தேவையான அளவு மட்டும் எரிபொருளை பயன்படுத்த வேண்டும் என்றும், எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் அத்தியாவசிய தேவைகளுக்கான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், எரிபொருள் பயன்பாட்டை குறைக்க குடிமக்கள் தங்கள் வேலைகளுக்கு செல்லும் போது பொது போக்குவரத்தை அதிக அளவு பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க அல்பானிஸ் தலைமையிலான அரசு 2.55 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் மதிப்பிலான நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அதன்படி, எரிபொருள் மீதான கலால் வரி 3 மாதங்களுக்கு 50% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, கனரக வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் சிறு தொழில்களுக்கு எளிய முறையில் கடன் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

