Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை? 117 முக்கிய தலைவர்கள் கடிதம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை? 117 முக்கிய தலைவர்கள் கடிதம்

Lankasri News 3 weeks ago

ந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவை சரிசெய்ய 117 முக்கிய தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் உறவு

கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் அரசு இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இந்திய அரசு, பாகிஸ்தான் உடனான தூதரக உறவுகளை துண்டிப்பது, விசாவை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.

இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்க்கும், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான மையம்' (Centre for Peace and Progress) என்ற அமைப்பின் பெயரில் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த 61 முக்கிய பிரமுகர்களும், பாகிஸ்தான் முன்னாள் வெளியறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்முத கசூரி உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த 56 முக்கிய பிரமுகர்களும் என 117 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கடிதத்தில், "இந்தியாவும் பாகிஸ்தானும் மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. இரு நாடுகளிலும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். பத்தாண்டுகால அந்நியமாதல் இரு நாடுகளுக்கும் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு நீடித்த ஈடுபாடு மட்டுமே சாத்தியமான ஒரே வழி ஆகும். மக்களுக்கு அமைதி, வளர்ச்சி மற்றும் இணைப்பு தேவை, நிலையான அவநம்பிக்கை அல்ல.


இது பாகிஸ்தானின் பகுதி இல்லை; இந்தியாவின் உதவியை நாடுவோம் - POK மக்கள் எச்சரிக்கை

இருப்பினும், இந்த வேண்டுகோள் ஒரு அரசியல் ஆதரவு அல்ல. மாறாக 200 கோடிக்கும் அதிகமான மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான அழைப்பு. தனிமைப்படுத்தலுக்குப் பதிலாக ஈடுபாட்டையும், விரோதத்திற்குப் பதிலாக உரையாடலையும் தேர்ந்தெடுக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

மேலும், முழுமையான தூதரக உறவுகளை மீட்டெடுக்க வேண்டும். டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் ஆணையர்களை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும். வழக்கமான விசா சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும். வணிக விமானங்களுக்காக வான்வெளியை மீண்டும் திறக்க வேண்டும்.

வர்த்தகம்/பயணத்திற்காக அட்டாரி-வாகா தரைவழி எல்லை, கர்தார்பூர் சாஹிப் வழித்தடம் ஆகியவற்றை மீண்டும் திறக்க வேண்டும். ஸ்ரீநகர்-முசாஃபராபாத் பேருந்து சேவைக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். நீலம் பள்ளத்தாக்கில் உள்ள சாரதா பீடத்திற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் உட்பட, தீர்க்கப்படாத அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் விரிவான இருதரப்புப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும்.

2004-2007 கட்டமைப்பை மறுபரிசீலனை செய்து, ஆயுதக் குறைப்பு மற்றும் பதற்றத் தணிப்பை முன்னெடுத்தல், அத்துடன் பரஸ்பர பாதுகாப்பு தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்தல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பாஜக - காங்கிரஸ் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப், இந்தியா அமைதிக்கு உறுதியுடன் இருப்பதாகக் கூறியதோடு, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்தாத வரையில் பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்று தெரிவித்தார்.

இதேபோல், "பயங்கரவாத ஏற்றுமதிக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும் என்பது மட்டுமே பாகிஸ்தானிடமிருந்து இந்தியா எதிர்பார்க்கும் ஒரே விஷயம். அது நிகழும் வரை, உறவுகளை இயல்பாக்குவதற்கான கோரிக்கைகளைப் புரிந்துகொள்வது கடினம்" என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News