Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

ஜேர்மனியில் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு மக்களுக்கு வலியுறுத்தல்

Lankasri News 0 months ago

மேற்கு ஐரோப்பாவில் டசின் கணக்கான இறப்புகளுக்குக் காரணமான வெப்ப அலை கிழக்கு நோக்கிப் பரவிய நிலையில், ஜேர்மனியும் இத்தாலியும் சனிக்கிழமையன்று கடும் வெப்பத்தை எதிர்கொண்டுள்ளன.

மிக அதிகபட்ச வெப்பநிலை

ஜேர்மனியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ள நிலையில், அதிகாரிகள் தண்ணீரைச் சேமிக்குமாறு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளனர்.

டென்மார்க் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நாட்டில் சனிக்கிழமையன்று இதுவரை பதிவானதிலேயே மிக அதிகபட்ச வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது.

ஓடென்ஸிற்கு (Odense) வடக்கே 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், 1874-இல் அளவீடுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிக வெப்பமான நாளாக அமைந்துள்ளது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இரவு வெப்பநிலை 26.3 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறையாத நிலையில், அதுவே இதுவரை பதிவானதிலேயே மிக வெப்பமான இரவு என்று ஸ்லோவாக்கியா உறுதிப்படுத்தியது.


ஐரோப்பாவை சுட்டெரிக்கும் வெப்ப அலை... பொது நிகழ்ச்சிகள் மொத்தம் நிறுத்தம்

பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஜூன் மாதத்தில் சாதனை அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது; போலந்தை நோக்கி நகரும் இந்த வானிலை அமைப்பு மேலும் பல சாதனைகளை ஏற்படுத்தக்கூடும்.

பிரித்தானியாவில் மட்டும் ஜூன் மாதத்தில், நீர்நிலைகளில் மூழ்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6 என தெரிய வந்துள்ளது. மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 15 என பதிவாகியிருந்தது.

தண்ணீர் சிக்கனம்

வெள்ளிக்கிழமையன்று, பிரெஞ்சு எல்லைக்கு அருகிலுள்ள ஜேர்மனியின் சார்ப்ரூக்கன் (Saarbrücken) நகருக்கு அருகே 41.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனை வெப்பநிலை பதிவானது.

ஜேர்மனி முழுவதும் கடுமையான வெப்பம் நிலவும் என்று நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமையன்று எச்சரிக்கை விடுத்தது; அதேவேளையில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

ஜேர்மனி முழுவதும் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஜேர்மனியின் தேசிய ரயில் நிறுவனமான 'டாய்ச் பான்' (Deutsche Bahn), வாடிக்கையாளர்கள் தங்கள் நீண்ட தூரப் பயண முன்பதிவுகளை அடுத்த வாரத் தொடக்கம் வரை கட்டணமின்றி ரத்து செய்துகொள்ளும் வசதியை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், வார இறுதியில் கடும் வெப்பம் குறையத் தொடங்கும் என்றும், ஞாயிற்றுக்கிழமையன்று பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Lankasri News