Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பற்றி எரியும் போர் மேகங்கள்! 8 முக்கிய பாலங்களை குறிவைக்கும் ஈரானிய ஏவுகணைகள் - பீதியில் உலக நாடுகள்!

பற்றி எரியும் போர் மேகங்கள்! 8 முக்கிய பாலங்களை குறிவைக்கும் ஈரானிய ஏவுகணைகள் - பீதியில் உலக நாடுகள்!

த்திய கிழக்கு பிராந்தியத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் போர் பதற்றம் தற்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானின் மிக முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தி வரும் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஈரானின் மிக உயரமான மற்றும் முக்கிய பாலமான 'பி1' (B1) பாலத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் அந்த நாட்டின் போக்குவரத்து மற்றும் கட்டுமானப் பிரிவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலானது ஈரான் நாட்டை கற்காலத்திற்கு தள்ளுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே அரங்கேறியுள்ளது உலக நாடுகளை திகைக்க வைத்துள்ளது.

ஈரானின் வடக்கு நகரமான கராஜ் பகுதியில் கட்டப்பட்டு வந்த இந்த பிரம்மாண்ட பாலம், சுமார் 136 மீட்டர் உயரம் கொண்டது. இந்த பாலம் தெஹ்ரான் நகரத்தையும் கராஜ் நகரத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய போக்குவரத்துத் திட்டமாக இருந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த குண்டுவீச்சில், பாலத்தின் பெரும் பகுதிகள் சரிந்து விழுந்துள்ளன. இந்த கொடூரமான தாக்குதலில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 95-க்கும்மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாலத்தின் சிதைந்த பாகங்கள் சரிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதற வைக்கின்றன.

இந்த அழிவுகரமான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் தற்போது ஒரு ரகசிய 'ஹிட் லிஸ்ட்' எனப்படும் தாக்குதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, வளைகுடா நாடுகளில் உள்ள எட்டு மிக முக்கியமான பாலங்களை தங்களது இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த பட்டியலில் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷேக் சையத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலிபா பாலம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் சவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் புகழ்பெற்ற கிங் ஃபஹ்த் பாலம் மற்றும் ஜோர்டான் நாட்டில் உள்ள மூன்று முக்கிய பாலங்களும் இந்த இலக்கு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த தாக்குதல் குறித்த வீடியோவைப் பகிர்ந்து, ஈரானின் மிகப்பெரிய பாலம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் அதை பயன்படுத்தவே முடியாது என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், ஈரான் சமாதான பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் அந்த நாடு முழுவதுமே அழிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால் அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு ஈரான் சற்றும் பணியவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, சிவிலியன் கட்டமைப்புகள் மற்றும் கட்டி முடிக்கப்படாத பாலங்களை தாக்குவது ஈரானியர்களை பணிய வைக்காது என்றும், இது எதிரிகளின் தார்மீக வீழ்ச்சியையே காட்டுகிறது என்றும் காட்டமாக பதிலளித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து, அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதுவரை நடந்த மோதல்களில் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஈரான் தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது பாலங்களை குறிவைத்துஈரான் வெளியிட்டுள்ள இந்த புதியபட்டியல், போர் இன்னும் தீவிரமடையும் என்பதையே உணர்த்துகிறது. வளைகுடா நாடுகளின் பொருளாதார மற்றும் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கும் இந்தப் பாலங்கள் தாக்கப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது.

ஈரானின் இந்த வெளிப்படையான எச்சரிக்கை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகள் அமெரிக்காவின் ராணுவ தளங்களை கொண்டுள்ளதால், ஈரானின் நேரடி தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், தற்போது நிலவழிப் போக்குவரத்துக்கான பாலங்களும் இலக்காக மாறியிருப்பது சர்வதேச வர்த்தகத்தை முடக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வழிகள் அடைபட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியம் ஒரு முழுமையான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal