Dailyhunt
மத்திய கிழக்கு போர் பதற்றம்: பாசுமதி அரிசி ஏற்றுமதி முடக்கம்! 'போர்ஸ் மெஜூர்' என்றால் என்ன? இந்திய விவசாயிகளுக்கு ஆபத்தா?

மத்திய கிழக்கு போர் பதற்றம்: பாசுமதி அரிசி ஏற்றுமதி முடக்கம்! 'போர்ஸ் மெஜூர்' என்றால் என்ன? இந்திய விவசாயிகளுக்கு ஆபத்தா?

த்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் தீவிர போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளது.

குறிப்பாக, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே வெடித்துள்ள மோதலால் கடல் வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில், இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் தங்களது ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியாமல் 'போர்ஸ் மெஜூர்' (Force Majeure) என்னும் சட்டப்பிரிவை நாடத் தொடங்கியுள்ளனர். இது சர்வதேச வர்த்தக உலகில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலால் சுமார் 4 லட்சம் மெட்ரிக் டன் பாசுமதி அரிசி துறைமுகங்களிலும், நடுக்கடலிலும் தேங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'போர்ஸ் மெஜூர்' என்பது ஒரு பிரெஞ்சு சொல்லாகும், இதற்கு 'தவிர்க்க முடியாத சக்தி' என்று பொருள். சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில், இயற்கை சீற்றங்கள், போர், கலவரம் போன்ற மனிதக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் ஒரு தரப்பால் தனது கடமையைச் செய்ய முடியாமல் போனால், இந்த விதியைப் பயன்படுத்தி அபராதத்தில் இருந்தோ அல்லது சட்ட ரீதியான நடவடிக்கைகளில் இருந்தோ தப்பித்துக் கொள்ள முடியும். தற்போதைய வளைகுடா நெருக்கடி என்பது ஏற்றுமதியாளர்களின் கைகளில் இல்லாத ஒன்று என்பதால், அவர்கள் இந்த விதியை முன்வைத்து வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கின்றனர்.

வளைகுடா நாடுகள் இந்தியாவின் பாசுமதி அரிசிக்கு மிக முக்கியமான சந்தைகளாகும். சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மட்டும் இந்தியாவின் மொத்த பாசுமதி ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன. குறிப்பாக, ஹார்முஸ் நீர்சந்தி வழியாகவே ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்குச் சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது அந்தப் பாதையில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், கப்பல் நிறுவனங்கள் அந்த வழியாகச் செல்ல மறுக்கின்றன அல்லது இன்சூரன்ஸ் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தியுள்ளன. இதனால் ஏற்கனவே அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் பாதியிலேயே நின்றுவிட்டன.

இந்த விநியோகத் தடையால் கப்பல் போக்குவரத்து கட்டணம் (Freight rates) இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துள்ளது. ஒரு கண்டெய்னருக்கான வாடகை 3,500 டாலர் முதல் 4,500 டாலர் வரை அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இது தவிர, போர் அபாயக் கூடுதல் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வும் ஏற்றுமதியாளர்களின் லாபத்தை முழுமையாக விழுங்கிவிட்டன. பல ஏற்றுமதியாளர்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கி வருவதால், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு துறைமுகக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சரக்குகளுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தாக்கம் வெளிநாட்டுச் சந்தையில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்றுமதி முடங்கியதால், உள்நாட்டுச் சந்தையில் பாசுமதி அரிசியின் விலை குவிண்டாலுக்கு 300 முதல் 800 ரூபாய் வரை குறைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள விவசாயிகள்ஏற்கனவே அறுவடை செய்து விற்பனைக்குக்கொண்டு வந்த அரிசிக்குத் தகுந்த விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஏற்றுமதியாளர்கள் புதிய ஆர்டர்களை எடுக்கத் தயங்குவதால், ஆலைகளில் அரிசி மூட்டைகள் தேங்கி வருகின்றன. இது நீண்ட காலத்திற்கு நீடித்தால், இந்திய பாசுமதி அரிசியின் சர்வதேச நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (IREF), இந்தச் சூழலை ஒரு 'வர்த்தக அவசரநிலை'யாக அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்கள் இப்போது ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், பயண நேரம் 10 முதல் 15 நாட்கள் வரை அதிகரித்துள்ளது. இது சரக்குகளின் தரத்தைப் பாதிப்பதோடு, செலவையும் பலமடங்கு கூட்டுகிறது. அரசாங்கம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே, சர்வதேச நீதிமன்றங்களில் இந்திய நிறுவனங்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal