Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"விமானத்தை எரித்து... அமெரிக்க விமானியை சுட்டுக் கொன்ற கிளர்ச்சியாளர்கள்!" - இந்தோனேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல்

"விமானத்தை எரித்து... அமெரிக்க விமானியை சுட்டுக் கொன்ற கிளர்ச்சியாளர்கள்!" - இந்தோனேஷியாவில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல்

ந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பாப்புவா மாகாணத்தில் நடைபெற்ற ஆயுதத் தாக்குதல், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைதூர மலைப்பகுதியில் தரையிறங்கிய சிறிய விமானத்தின் மீது ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி, அதனை ஓட்டி வந்த அமெரிக்க விமானியை சுட்டுக் கொன்றனர். தாக்குதலுக்குப் பிறகு விமானத்திற்கும் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மணி நேர சவாலான தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தோனேஷிய ராணுவம் விமானியின் உடலை மீட்டுள்ளது. இந்த சம்பவம், பல ஆண்டுகளாக நீடித்து வரும் பாப்புவா பிரிவினைவாத மோதலை மீண்டும் உலகின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

உயிரிழந்த விமானி நிக்கோலஸ் எப். கோசெலின் (Nicholas F. Goselin) என்ற அமெரிக்கர். அவர் இந்தோனேஷியாவின் PT AMA என்ற விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிறுவனம், சாலை வசதிகள் இல்லாத தொலைதூர மலை கிராமங்களுக்கு உணவு, மருந்து, அஞ்சல் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் பணியை செய்து வருகிறது. சம்பவம் நடந்த நாளில், அவர் பாப்புவா ஹைலண்ட்ஸ் மாகாணத்தின் யஹூகிமோ (Yahukimo) மாவட்டத்தில் உள்ள இப்தெஹைக் (Ipdeheik) விமானத் தளத்தில் விமானத்தை தரையிறக்கிய சில நிமிடங்களிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது.

அதிகாரிகளின் தகவலின்படி, அந்த விமானத்தில் விமானியைத் தவிர ஏழு உள்ளூர் பாப்புவா பயணிகள் இருந்தனர். தாக்குதல் நடந்தபோது அவர்கள் உயிர் தப்பியதாகவும், பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானி மீது நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குப் பிறகு ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் விமானத்திற்கு தீ வைத்து எரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு மேற்கு பாப்புவா தேசிய விடுதலை ராணுவம் (TPNPB) என்ற ஆயுதப் பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தங்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமக்கள் விமானங்கள் இயக்கப்படக்கூடாது என்று முன்பே எச்சரித்திருந்ததாகவும், அந்த எச்சரிக்கையை மீறியே இந்த விமானம் வந்ததாகவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் செப்பி சாம்போம் (Sebby Sambom) தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானங்கள் பொதுமக்கள் சேவைக்காக மட்டுமல்லாமல், இந்தோனேஷிய ராணுவத்திற்கும் தளவாட உதவிகளை வழங்க பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தோனேஷிய ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த விமானத்தில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லை; முழுமையாக பொதுமக்கள் மட்டுமே பயணம் செய்தனர்என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு அந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலைகள் சூழ்ந்த அடர்ந்த காடுகள், மோசமான வானிலை மற்றும் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் ஆகியவற்றால் மீட்புப் பணி மிகவும் சவாலாக இருந்தது. இருப்பினும், சிறப்பு ராணுவ வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் உதவியுடன் இந்தோனேஷிய ராணுவம் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு விமானியின் உடலை மீட்டது. இந்த மீட்புப் பணியில் 10 சிறப்பு வீரர்கள் பங்கேற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர் உடல் ஜகார்த்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அமெரிக்க தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த சம்பவம் தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், பல ஆண்டுகளாக நீடித்து வரும் பாப்புவா பிரச்சினையின் தொடர்ச்சிதான் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வளமான இயற்கை வளங்களை கொண்ட பாப்புவா பகுதி 1969-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் ஆதரவில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பின் மூலம் இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்கெடுப்பு நியாயமானதாக இல்லை என்று கூறி, பல பாப்புவா அமைப்புகள் தொடர்ந்து சுதந்திரம் கோரி போராடி வருகின்றன. இந்த ஆயுதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானபொதுமக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டு விமானிகள் இந்த மோதலின் முக்கிய இலக்குகளாக மாறியுள்ளனர். 2023-ஆம் ஆண்டு நியூசிலாந்தைச் சேர்ந்த விமானி பிலிப் மார்க் மெஹர்டென்ஸ் கடத்தப்பட்டு பல மாதங்கள் பணயக் கைதியாக வைக்கப்பட்டார். பின்னர் 2024-ல் மற்றொரு நியூசிலாந்து விமானியும் இதே போன்ற தாக்குதலில் உயிரிழந்தார். தற்போது அமெரிக்க விமானி நிக்கோலஸ் கோசெலின் கொல்லப்பட்டிருப்பது, பாப்புவா பகுதியில் விமானப் போக்குவரத்து எவ்வளவு ஆபத்தானதாக மாறியுள்ளது என்பதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அரசு உடனடியாக இந்தோனேஷிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், இந்தோனேஷிய அரசு தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்று உறுதியளித்துள்ளது. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதன்படி, பாப்புவா பகுதியில் விமான சேவை என்பது வெறும் போக்குவரத்து வசதி மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாக இணைந்துள்ளது. அங்கு சாலைகள் இல்லாததால் உணவு, மருந்து, மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விமானங்கள் மூலமே சென்றடைகின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், தொலைதூர கிராமங்களில் வாழும் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்க விமானி நிக்கோலஸ் கோசெலினின் மரணம், ஒரு தனிப்பட்ட கொலைச் சம்பவமாக மட்டுமல்லாமல், பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் நீடித்து வரும் பாப்புவா மோதலின் இன்னொரு சோகமான அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. அரசியல் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் வன்முறை தொடர்ந்து அதிகரித்தால், பொதுமக்கள், வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் மனிதாபிமான சேவைகளே மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உலகிற்கு நினைவூட்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Malai Murasu Seithigal