Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
11வது சம்பவம் : அமெரிக்காவில் சடலமாக இந்திய மாணவர் கண்டெடுப்பு!

11வது சம்பவம் : அமெரிக்காவில் சடலமாக இந்திய மாணவர் கண்டெடுப்பு!

Minnambalam 2 years ago

மெரிக்காவில் காணாமல் போனதால் தேடப்பட்டு வந்த இந்திய மாணவர் ஓஹியோவில் உயிரிழந்த சடலமாக இன்று (ஏப்ரல் 9) கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்மூலம் இந்த ஆண்டில் அமெரிக்காவில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள க்ளீவ்லேண்ட் மாநில பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு முதுகலைப் படிப்பிற்காக சேர்ந்தார் 25 வயதான மாணவர் முகமது அப்துல் அர்பாத். ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு திடீரென காணாமல் போனார்.

இதனையடுத்து, அப்துலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் க்ளீவ்லேண்ட் காவல் அதிகாரிகளுடன் தேடுதல் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அப்துல் உடல் ஓஹியோவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய தூதரகம் அறிக்கை!

இதுகுறித்து தூதரக இயக்குநர் பினயா ஸ்ரீகாந்த பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேடல் நடவடிக்கை நடந்து கொண்டிருந்த முகமது அப்துல் அர்பாத்தின் உடல் உயிரிழந்த நிலையில் ஓஹியோவில் இன்று மீட்கப்பட்டதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். முகமது அர்பாத்தின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகமது அப்துல் அர்பாத்தின் மரணம் குறித்து முழுமையான விசாரணையை உறுதி செய்வதற்காக உள்ளூர் காவல்துறையுடன் இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. அவரது சடலத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 11வது சம்பவம்!

அப்துல் மரணத்தை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமெரிக்காவில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் கிளீவ்லேண்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்த மற்றொரு இந்திய வம்சாவளி மாணவி உமா சத்ய சாய் காடே இறந்து கிடந்தார். இதுதொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் தற்போது அப்துல் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை கேள்விகுறியாக்கியுள்ளது.

முன்னதாக செயின்ட் லூயிஸ், மிசோரியில் 34 வயதான இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் பரிதாபமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து 23 வயது இந்திய வம்சாவளி மாணவர் இண்டியானாவில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

காலமானார் ஆர்.எம்.வீ.

பாஜக இலக்கும்… மாம்பழம் விலையும் : வைரலாகும் முன்னாள் தேர்தல் ஆணையரின் பதிவு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam