2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு அனுமதி மனு இன்று (மார்ச் 22) டெல்லி உயர் நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்பட 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வந்தனர்.
டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் 2017 டிசம்பர் 21 இல் விடுதலை செய்தார் நீதிபதி சைனி.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு அனுமதி மனு செய்திருந்தன.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த ஆறு வருடங்களாக பல்வேறு நீதிபதிகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரித்துள்ளனர். கடைசியாக நீதிபதி தினேஷ்குமார் சர்மா இந்த மனுவை விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை கடந்த 14 ஆம் தேதியன்று, மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்த பின்னணியில் 2ஜி வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு அனுமதி மனுக்கள் மீது இன்று உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். "சிபிஐ, அமலாக்கத்துறைகளின் மேல் முறையீட்டு அனுமதி மனு விசாரணைக்கு உகந்தது. மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அதிகாரப்பூர்வமாக மே 20ஆம் தேதி தொடங்கும்" என்று தெரிவித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
ஏற்கனவே இருக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்கள் அடிப்படையில் மீண்டும் இந்த வழக்கை விசாரிக்கலாம் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து
GOLD RATE: சட்டென மாறியது விலை… எவ்ளோ கொறைஞ்சிருக்குன்னு பாருங்க!
பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? : தங்கர் பச்சான் விளக்கம்!

