நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்த பிறகும் கூட அவரை சதி வலையில் சிக்க வைப்பதற்காக திமுக அரசியல் செய்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 8) குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தனக்கு சம்பந்தமில்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் அவரை சதி வலையில் சிக்க வைப்பதற்காக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அரசியல் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம், பறக்கும் படை அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தட்டும்.
கோவையில் 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களுக்கு தங்கத்தோடு, ரூ.2000 பணம் கொடுக்கிறார்கள். அடுத்த 10 நாட்களில் இன்னும் அதிக இலவச பொருட்களை கோவை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள். அதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை.
பாஜக வேட்பாளர்களின் அனைத்து தொகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி புகாரளித்திருப்பது, ஒரு வீட்டிலிருந்து திருடன் ஓடி வந்து காவல்துறையை குழப்புவதற்காக திருடன், திருடன் என்று சொல்வது போல உள்ளது. கோவையில் தங்கச்சுரங்கத்தையே கொட்டினாலும் கூட, மக்கள் தாமரை சின்னத்திற்கு தான் வாக்களிப்பார்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "கோவையின் திமுக தேர்தல் களத்தை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து இயக்கி வருகிறார். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கரூர் கம்பெனி ஆட்களிடம் ஜெயிலில் இருந்து தினமும் செந்தில் பாலாஜி பேசுகிறார். டி.ஆர்.பி. ராஜாவுக்கு அவர் தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கொடுத்துக்கொண்டிருக்கிறார். அவர் சொன்னதை டி.ஆர்.பி ராஜா இங்கே செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இந்த முறை என்ன கதை, திரைக்கதை எழுதினாலும் கோவை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி" என்று அண்ணாமலை தெரிவித்தார்.

