பாராட்ட மனமில்லை என்றாலும் அமைதியாக இருங்கள் என, நடிகை அம்பிகா தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட குஷ்பூ, தமிழக அரசின் பெண்களுக்கு மாதம் ரூபாய் 1௦௦௦ வழங்கும் 'கலைஞர் மகளிர்' உரிமைத்திட்டத்தினை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
குறிப்பாக மாதம் ரூபாய் 1௦௦௦ பிச்சை போட்டால் அதற்காக அவர்கள் ஓட்டுப்போட்டு விடுவார்களா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதைப்பார்த்த பலரும் குஷ்பூவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களிலும் குஷ்பூவை டேக் செய்து பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் குஷ்பூவிற்கு நடிகை அம்பிகா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், "யாராக இருந்தாலும் சரி, எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள்.
பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்", என தெரிவித்து இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, தற்போது அம்பிகாவின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-மஞ்சுளா
"சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை" : அமித்ஷா திட்டவட்டம்!

