அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் இன்று (மார்ச் 20) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.
மேலும், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேமுதிகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்தநிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து தொகுதிகள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிக போட்டியிட உள்ளது.

