Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜக கூட்டணியில் தமாகா: அறிவிக்கத் தயாராகும் ஜி.கே.வாசன்

பாஜக கூட்டணியில் தமாகா: அறிவிக்கத் தயாராகும் ஜி.கே.வாசன்

Minnambalam 2 years ago

பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின்பாதயாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.

அப்போது தமிழக பாஜக தலைமையிலான கூட்டணியின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நாளை காலை பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார். தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் இன்று பிப்ரவரி 25 இரவு ஜிகே வாசனை சென்னையில் சந்தித்துப் பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது என தமிழ் மாநில காங்கிரஸ் வட்டாரத்தினர் தெரிவிக்கிறார்கள்.

அதிமுக -பாஜக கூட்டணி உடைந்த நிலையில் இந்த கூட்டணியை மீண்டும் ஒட்ட வைப்பதற்காக ஜி. கே. வாசன் கடுமையாக முயற்சி செய்தார், சமீபத்தில் கூட இதற்காக அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வாசன்சந்தித்து பேசினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு சம்மதிக்கவில்லை.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை கூட்டிய வாசன், யாரோடு கூட்டணி வைக்கலாம் என்று தனது கட்சியின் செயற்குழு உறுப்பினர்களிடம் வாக்குச்சீட்டு அளித்து வாக்களிக்கச் சொன்னார்.

அப்போது அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்றே செயற்குழுவில் அதிகமான பேர் தெரிவித்ததாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகிறார்கள். செயற்குழு உறுப்பினர்கள் வாக்களித்த சீட்டுகளை தன் வசம் வைத்திருக்கிறார் வாசன்.

இந்த நிலையில்தான் இன்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சென்னை ஆழ்வார் பேட்டையில் ஜி.கே.வாசனை சந்தித்தார். இந்நிலையில், நாளை பாஜகவோடு கூட்டணி அமைக்கப் போவதாக அறிவிக்க இருக்கிறார் என்கிறார்கள் தமாகா முக்கியஸ்தர்கள்.

இது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, "தற்போது ஜி.கே. வாசன் வசித்து வரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களால் அவருக்கு அளிக்கப்பட்டது. அப்போதே, 'வாசனுக்குக் கொடுப்பதை விட தேமுதிகவின் சுதீஷுக்கு அளிக்கலாம். அவர்கள் நம்மை தொடர்ந்து ஆதரிப்பார்கள். வாசன் மோடியோடு நல்ல நெருக்கத்தில் இருக்கிறார், எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் வேறொரு முடிவெடுக்கலாம்' என்று தலைமையிடம் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினார்கள். ஆனால் அப்போது டெல்லி பாஜகவும் வாசனுக்கு ஆதரவாக பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வாசனுக்கு அளித்தார். இப்போது வாசன் அந்த அடிப்படையில்தான் முடிவெடுத்திருக்கிறார்" என்கிறார்கள்.

மீண்டும் மோடி பிரதமராகும் பட்சத்தில், தான் மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் வாசன் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவோடு கூட்டணி… ராமதாஸ் போடும் 3 கணக்குகள்!- திமுக கூட்டணியில் திருமா, வைகோ அதிருப்தியா?

IND vs ENG: புதிய சாதனைகளை அடித்து நொறுக்கிய அஸ்வின், ரோகித் சர்மா

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam