Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பாஜகவில் வாரிசு அரசியல் : ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டி!

பாஜகவில் வாரிசு அரசியல் : ஈஸ்வரப்பா சுயேட்சையாக போட்டி!

Minnambalam 2 years ago

பாஜக சார்பில் ஷிமோகா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவை எதிர்த்து, அக்கட்சியின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பா இன்று (ஏப்ரல் 12) சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு வழக்கம் போல ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பாஜகவால் அறிவிக்கப்பட்ட மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா பெயர் இடம்பெறவில்லை.

அதேவேளையில் அவர் எதிர்பார்த்த ஷிமோகா மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளராக கர்நாடக பாஜக மாநில தலைவரும், எடியூரப்பா மகனுமான சிட்டிங் எம்.பி ராகவேந்திரா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ஈஸ்வரப்பா, இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றார். ஆனால் அவரை சந்திக்க அமித்ஷா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் ராகவேந்திராவை எதிர்த்து, ஷிமோகா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக கூறி பெரும் ஆதரவாளர்களுடன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஈஸ்வரப்பா.

ராமண்ணா ஸ்ரெஸ்டி பூங்காவில் இருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற அவர், துணை ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குருதத்தா ஹெக்டேவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முக்கிய சாலை வழியாக வந்த அவருக்கு, வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் ஊர்வலத்தில் அவருடன் வந்த பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஈஸ்வரப்பாவுக்கு மாலை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக வேட்பாளர் ராகவேந்திராவை எதிர்த்து போட்டியிடும் நிலையிலும் பிரதமர் மோடி போல் உடையணிந்த ஒருவர் ஊர்வலத்தில் ஈஸ்வரப்பாவுக்கு ஆதரவு திரட்டினார்.

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஈஸ்வரப்பா பேசுகையில், "பாஜகவில் வாரிசு அரசியலுக்கு பாடம் புகட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், நான் சுயேட்சையாக போட்டியிடுகிறேன்.

மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவது, எம்.பி. பதவியை பெறுவதற்காக மட்டும் அல்ல. ஒரு குடும்பத்தின் செல்வாக்கில் இருந்து பாஜகவை காப்பாற்றுவதகாகவும் தான்.

கட்சிக்குள் ஒரே குடும்பத்தின் ஆதிக்கத்தால் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனது முடிவு என்பது அநீதிக்கு எதிரான நிலைப்பாடு.

சுயேச்சையாக போட்டியிட்டாலும் மோடி படத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். ஷிமோகா தொகுதியில் இப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டதால், இத்தொகுதியின் தற்போதைய எம்பியும், வேட்பாளருமான ராகவேந்திரா தோல்வியை சந்திப்பார். அதோடு எடியூரப்பாவின் மற்றொரு மகனும், கர்நாடக மாநில பாஜக தலைவருமான பிஒய் விஜயேந்திரா தனது பதவியில் இருந்து விலகுவார்" என்று பேசினார்.

எடியூரப்பா மகனுக்கு நெருக்கடி!

கர்நாடகாவில் துணை முதலமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா, அம்மாநில பாஜகவில் மூத்த தலைவராக உள்ளார். இந்த நிலையில் அவர் சுயேட்சையாக போட்டியிடுவது எடியூரப்பா மகனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதே ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

Mayank Yadav: வந்த 'திடீர்' சிக்கல்… என்ன செய்யப்போகிறது லக்னோ?

Video: பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam