பிருத்விராஜ் சுகுமாறன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடு ஜீவிதம்' படத்தின் ட்ரெய்லர் இன்று (மார்ச் 9) ரிலீசாகி உள்ளது.
இந்தாண்டின் முதல் காலாண்டிலேயே பிரேமலு, பிரமயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் என பெரும் வெற்றியை பதிவு செய்துள்ள மலையாள திரையுலகம் உற்சாகத்தில் உள்ளது.
இந்த நிலையில், மலையாள திரைப்பட உலகில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாக 'ஆடு ஜீவிதம்' உள்ளது.
மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' நாவலை அடிப்படையாக கொண்ட இப்படத்தை ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகர்களான ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்துள்ளார்.

பாலைவன மணலில் துடிக்கும் பிருத்வி
ஆடு ஜீவிதம் திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரம் தாமதமாக வெளியாகியுள்ள டிரெய்லர் பலரையும் உற்றுநோக்க செய்துள்ளது.
தன் குடும்பத்திற்காக அரேபிய தேசத்துக்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் 'ஆடு ஜீவிதம்' நாவலின் கதை.

அதனை அப்படியே பிரதிபலிக்கிறது ஆடு ஜீவிதம் படத்தின் டிரெய்லர். ஒரு நிமிடம் 34 வினாடிகள் நீளமுள்ள இந்த வீடியோவில் அரேபியாவின் செம்மண் பாலைவனங்களில் உயிர்வாழும் கொடுமையான நாட்களைப் பற்றிய உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை அளிக்கிறது.
ட்ரெய்லர் முழுக்க முழுக்க கதாநாயகன் பிருத்விராஜ் சுகுமாரனைச் சுற்றியே நகர்கிறது. அதில் பல இடங்களில் அவர் காட்டும் ரியாக்சன்ஸ் அங்குள்ள சூழ்நிலையை அப்பட்டமாக விவரிக்கிறது. இடையே அமலா பாலின் காதல் காட்சிகளும் நினைவுகளாக காட்டப்படுகிறது.

