நம்மில் பலருக்கு சருமத்தின் நிறம் ஒரே மாதிரி இல்லாமல் அங்காங்கே நிறம் மாறி இருக்கும். குறிப்பாக, நெற்றியில் கருமை படர்ந்திருக்கும்.
இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு, வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே அதை சரி செய்து கொள்ளக்கூடிய முடியும் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.
காய்ச்சாத பால் - தேவையான அளவு, பழுத்த தக்காளிச்சாறு - 3 - 4 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு - சிறிது, தேன் - 2 டீஸ்பூன், முல்தானி மெட்டி பவுடர் - 4 டீஸ்பூன், துளசிப்பொடி (துளசி இலையை நன்றாக உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்) - ஒரு டீஸ்பூன், ரோஸ் வாட்டர் - 4 டீஸ்பூன்… இவற்றை எடுத்துக்கொள்ளவும்.
பாலைப் பஞ்சில் தொட்டு, முகம் முழுவதும் தடவி, தேய்த்து எடுக்கவும் (Cleansing). தக்காளிச்சாற்றுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்துகொள்ளவும். இதை எடுத்து, வட்ட வடிவில் மசாஜ் செய்வதுபோல கருமை படர்ந்த நெற்றியில் தடவவும். குறிப்பாக, கருமை அதிகமாக இருக்கும் இடங்களில் நன்றாகத் தடவவும்.
10 நிமிடங்கள் காயவிட்டு, பஞ்சு கொண்டு துடைத்து எடுக்கவும். அடுத்து, ஃபேஸ்பேக் போட தேவையான அளவு முல்தானி மெட்டியை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் ஒரு டீஸ்பூன் துளசிப்பொடி சேர்க்கவும். இதில் 3 - 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து, பேக்போல கலந்துகொள்ளவும். இதனை சருமம் முழுக்கத் தடிமனாக அப்ளை செய்யவும்.
அதிக நேரம் காயவிடாமல் 10 நிமிடங்களில் மென்மையான பருத்தித்துணி கொண்டு அகற்றி விடவும். நெற்றியின் நிறம் சற்று சரியாகியிருக்கும், கருமை குறைந்திருக்கும். இதை முதல்முறையிலேயே உணரலாம். இந்த ஃபேஸ்பேக்கை வாரத்திற்கு மூன்று முறை செய்துவர, நல்ல பலனைக் காணலாம்.

