Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கைது!

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் கைது!

Minnambalam 2 years ago

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று (மார்ச் 9) கைது செய்தனர்.

கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி டெல்லியில் சூடோபெட்ரீன் என்ற அதிக போதை தரும் செயற்கை வேதிப்பொருளை, சத்துமாவு, உலர்ந்த தேங்காய்த் தூள் கலந்து கடத்த முயன்ற, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்

ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் ஒட்டினர். ஆனால், ஜாபர் சாதிக் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி திமுக ஆட்சியில் போதைப்பொருள் தங்கு தடையின்றி அனைத்து இடங்களிலும் கிடைப்பதாக குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சியான அதிமுக தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கண்டித்து கடந்த மார்ச் 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. தொடர்ந்து மார்ச் 12-ஆம் தேதி மனித சங்கிலி போராட்டதை அறிவித்துள்ளது.

இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam