அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட இன்று (ஏப்ரல் 6) தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் எடப்பாடி தொகுதியில் இன்று 8-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 1989, 1991, 2011, 2016, 2021 தேர்தல்களில் பழனிசாமி வெற்றி பெற்றுள்ள நிலையல் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், திமுக இது தமிழகத்திற்கும் டெல்லி அணிக்குமான தேர்தல் என்று கூறுவது குறித்த கேள்விக்கு, "தமிழகத்தில் நடைபெறுவது சட்டமன்றத் தேர்தல். இதை தேசிய அரசியலுடன் இணைத்துப் பேசுவது தவறான புரிதல்" எனத் தெரிவித்தார்.
மேலும், தவெகவிற்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்ற விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அவரது பேச்சு அறியாமையை காட்டுகிறது. விஜயின் பேச்சு குறித்து அவரிடமே நீங்கள் கேட்க வேண்டும். அதிமுக மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கட்சி" என்று தெரிவித்தார்.
மேலும், "வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது. 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
தேமுதிகவிற்கு 2026 இல் தான் எம்பி சீட் கொடுப்போம் என்று சொன்னேன். அவர்களின் மனநிலை வேறாக இருந்தது. கூட்டணி மாறிவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.
கூட்டணி அரசியல் தொடர்பாகப் பேசும்போது சில கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகவும், குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக அவர்கள் தலைமையிடமே விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

