மதிமுக அவசர செயற்குழு கூட்டத்தை தாயகத்தில் தொடங்கியுள்ளார் வைகோ. பம்பரம் சின்னத்தில் தான் நிற்போம் என்ற கோரிக்கையை திமுக பரிசீலிக்காததால், அதிமுக கூட்டணியில் சேர்வதற்கான ஆலோசனை கூட்டம் தான் இது என்று மாவட்ட செயலாளர்களே தெரிவிக்கின்றனர்.
வைகோவின் இந்த மன ஓட்டத்தை அறிந்த திமுக கூட்டணியில் சின்ன பிளவு கூட வந்துவிடக்கூடாது என கருதும் சிலர், வைகோவிடம் தொடர்புகொண்டு பேசினர்.
"ஆறு வருட காலத்திற்குள் சொந்த சின்னத்தில் நிற்காவிட்டால் கட்சியின் அங்கீகாரம் பறிபோய்விடும். கட்சிக்கு நன்கொடை வாங்கினால் கூட அதற்கு வரி விதிப்பார்கள். இப்படியான சட்ட சிக்கல்களை எவ்வளவோ எடுத்து சொன்ன போதும் பதிலுக்கு எந்த சட்ட சிக்கலும் வராது என்று தான் கூறுகிறார்கள். எதற்கு இந்த ரிஸ்க். மகன் துரையை நிறுத்துவதற்காகத் தான் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டேன் என்று நான் நினைப்பதாக சொல்கிறார்கள்.
அது தவறு. கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் தானே நின்றோம். இந்த முறை பம்பரம் சின்னத்தில் நிற்கிறோம். கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறோம் என்று தகவல் சொல்லி அனுப்பினேன். உரிய பதில் இல்லை. எனக்கு வேறு என்ன வழி இருக்கிறது" என்று கேட்கிறாராம்.
"சரி, அவசரப்படாதீர்கள் இன்றே எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். முடிவு எடுக்கக்கூடிய அதிகாரத்தை பொதுச்செயலாளருக்கு தந்துவிட்டு கொஞ்சம் தள்ளிப்போடுங்கள்" என பதிலுக்கு ஆலோசனை தந்திருக்கிறார்களாம்.

