பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் 37வது லீக் போட்டி பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூர் மைதானத்தில் நேற்று(ஏப்ரல் 22) இரவு நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
பஞ்சாப் சொதப்பல்!
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்ப்ரீத் பிரார் 29, சாம் கரன் 20 ரன்கள் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பந்தாடிய தெவாட்டியா
தொடர்ந்து 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் விருத்திமான் சஹா 13 ரன்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
எனினும் 2வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி நிதானமாக விளையாடினர். இருவரும் 35 ரன்கள் மற்றும் 31 ரன்களுடன் வெளியேறினர்.
அதன்பின்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ராகுல் தெவட்டியா 36 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
குஜராத் டைட்ன்ஸ் 19.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
பஞ்சாப் அணி தரப்பில் லிவிங்ஸ்டன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் அணி அதே 4 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
'ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு
RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு!

