சேலத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மார்ச் 19) பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, "
இந்து மதத்தை அவமதிக்கும் இந்தியா கூட்டணி!
தேர்தல் பிரச்சாரம் இப்போது படுபயங்கரமாக நாடு முழுவதும் தொடங்கி உள்ளது. , 'இந்து மதத்தை ஒழிப்பது ஒன்றே தங்கள் நோக்கம்' என இந்தியா கூட்டணியினர் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார்கள்.
இந்து மதத்தில் சக்தி என்பது என்ன? சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.
இங்குள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஓம் சக்தி என்று எழுதப்பட்டுள்ளது. அன்னை மாரியம்மனை நாம் இன்று சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். காஞ்சி காமாட்சி என்ற சக்தி பீடம், மதுரை மீனாட்சி அம்மன் சக்தியின் வடிவமாக கொண்டாடப்படுகிறார். இங்குள்ள சக்திமிக்க பெண் தெய்வங்கள் எல்லாம் பெண் வடிவில் தமிழகத்தில் இந்து மதத்தில் சக்தி என்பதற்கு மிகப்பெரிய அர்த்தம் இருக்கிறது.
ஆனால், காங்கிரஸ், திமுக கூட்டணி சக்தியின் வடிவத்தை, இந்த சனாதனத்தை அழித்துவிடுவோம் என்று கூறுகின்றனர். இதை அனுமதிக்க முடியுமா?
இந்தியா கூட்டணி வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து கொண்டே இருக்கிறார்கள். இந்து மதத்திற்கு எதிராக ஒரு கருத்தியலை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒவ்வொரு கருத்தும் ஆழமாக யோசித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை.
இந்த இந்தியா கூட்டணி இந்து மதத்தை தாக்கி பேசுகிறார்கள். ஆனால், வேறு எந்த மதத்திற்கும் எதிராக அவர்கள் பேசுவதில்லை. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஒரு வினாடி கூட வீணாக்காமல் இந்து மதத்தை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். இதை எப்படி நம்மால் அனுமதிக்க முடியும்?
தமிழ்நாட்டின் கலாச்சாரமான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவ இந்தியா கூட்டணி எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம், புனிதமான செங்கோல் இங்குள்ள சைவ, ஆகம மடங்களுக்கு சொந்தமானது.
அவர்களுடைய ஆன்மீக ஆசி பெற்ற செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவ கூடாது என்று எதிர்த்தார்கள். செங்கோலை இந்தியா கூட்டணி கட்சிகள் அவமதித்தார்கள்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
இந்து தர்மத்தில் வழிபாட்டிற்குரிய சக்தியின் தன்மையை அழிக்க நினைப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன், இதை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனதற்கான ஏராளமான அடையாளங்கள் நமது சாஸ்திரத்தில் உள்ளது.
ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் இருந்து தான் இந்த அழிவு அவர்களுக்கு தொடங்க போகிறது. நமது சுப்பிரமணிய பாரதி பெண் வடிவில் சக்தியை வழிபட்டவர். சக்தியை பெண் வடிவில் அன்னை என்று போற்றியவர்.
அவர் நாட்டின் பெண் சக்தியை வணங்கினார். சுப்பிரமணிய பாரதி வழியில் நானும் பெண் சக்தியை வணங்குகிறேன். எனவே, சக்தியின் அடையாளத்தை யார் யாரெல்லாம் அழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ, அவர்களை வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகம் மிக கடுமையாக தண்டிக்கும், இந்த உத்தரவாதத்தை தமிழகம் தருகிறது.
நம் நாட்டில் உள்ள பெண்களின் பிரச்சனைகளை தீர்க்கும் விதமாக நான் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கேடயம் போல இருந்து பணிபுரிகிறேன். திமுக, காங்கிரஸ் கூட்டணி பெண்களை கேவலமாக இழிவுபடுத்துகிறார்கள். இதற்கெல்லாம் தமிழ்நாடு தான் சாட்சி.
ஜெயலலிதாவை இழிவுபடுத்திய திமுக
உங்களுக்கு நினைவிருக்கலாம் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது அவரை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினார்கள், கொஞ்சம் நினைத்து பாருங்கள். அதுதான் அவர்களுடைய உண்மையான முகம்.
இன்றைக்கு நாங்கள் மகளிர் இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறோம். இந்தியா கூட்டணி அதை எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துபோயுள்ளது.
திமுகவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அவர்களின் அர்த்தம் என்பது ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சியை தொடர்ந்து செய்பவர்கள். அதனால் தான் காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்பிய பிறகு தான், நாட்டில் 5ஜி தொழில்நுட்பம் வளர்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஒரு புது டெக்னாலஜி கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்கள் தனியாக ஒரு 5ஜி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். திமுகவின் 5ஜி என்பது அவர்களின் ஐந்தாவது தலைமுறை மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
5ஜி குடும்ப ஆட்சி மோசடி, இதற்கு முன்னால் 2ஜி ஊழல் மோசடி செய்தனர். உலகம் முழுவதும் இந்தியாவை தலைகுனிய செய்தார்கள். இவர்கள் செய்த ஊழல்களை நான் பட்டியலிட்டால் ஒரு நாள் போதாது.
தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல லட்சம் கோடிகளை தமிழகத்திற்கு அனுப்புவதில் மிக ஆர்வமாக இருக்கிறது பாஜக அரசு. ஆனால், இங்குள்ள திமுக அரசு அந்த பணத்தில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று இருக்கிறது.
மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை நான் நினைவு கூர்கிறேன். தேசிய அரசியலில் மிகப் பெரிய உயரங்களை தொடக்கூடியவராக இருந்தார். அவர் மனது வைத்தால் இந்தியாவின் பிரதமராகியிருப்பார். அவரை காங்கிரஸ் குடும்ப ஆட்சி வளரவிட்டதா? அவருக்கு எதிராக எல்லா வேலைகளையும் செய்து அவரை வளரவிடமால் செய்தது தான் காங்கிரஸ் கட்சியின் குணம்.
அரசியலில் நேர்மை என்றவுடன் காமராஜர் தான் நினைவுக்கு வருகிறது. அவர் கொண்டுவந்த மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் மிகப்பெரிய திட்டம்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
செல்வம்
IPL 2024: எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்… நம்பிக்கை அளிக்கும் CSK வீரர்!

