Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!

Minnambalam 2 years ago

நாமக்கல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவும், அதிமுகவும் தேர்தல் செலவுக்காக எவ்வாறு பணப்பரிமாற்றம் செய்கிறார்கள் என்று வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுத்துறை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், வேட்புமனு, பரிசீலனை அனைத்தும் முடிந்து தேர்தலுக்கான செலவுகள் தொடங்கியிருக்கும் நிலையில், அதிமுக, திமுக என இரு தரப்பிலும் அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையானது தேர்தல் வரை தொடரும் என்று மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்தநிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பல இடங்களில் தொடர்கிறது.

குறிப்பாக, திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி, கோவை ராம் நகர், லட்சுமிபதி பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் வேலுமணி, நெல்லை அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன், திருச்செங்கோடு திமுக முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஆறுமுகத்தின் உறவினர் தனசேகர் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களிலும் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் டிடிவி தினகரனுக்காக வாக்கு சேகரிக்க வெளிமாவட்டங்களில் இருந்து சென்று அமமுக நிர்வாகிகள் தங்கியிருந்த விடுதி அறைகளில் வருமான வரித்துறையினர் நேற்று இரவு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பணம், பரிசுப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam