Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இவிஎம் - விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

இவிஎம் - விவிபேட் வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Minnambalam 2 years ago

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் இன்று (ஏப்ரல் 18) பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களது வாக்கினை யாருக்கு செலுத்தினார்கள் என்பதை உறுதிப்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் விவிபேட் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

7 வினாடிகள் ஒளிரும் இந்த விவிபேட் ஒப்புகை சீட்டு மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்க முடியும்.

இந்தநிலையில், 100 சதவிகிதம் ஒப்புகை சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் பிரஷாந்த் பூஷன் ஆஜராகி, "விவிபேட் இயந்திரம் 7 விநாடிகள் மட்டுமே ஒளிர்கிறது. சீல் வைக்கப்பட்ட பெட்டியில் சீட்டு விழும் வரை விவிபேட் இயந்திரம் ஒளிர வேண்டும்.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் மாதிரி வாக்குப்பதிவின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு எந்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வாக்கு பாஜகவுக்கு கூடுதலாக விழுந்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிங் ஆஜராகி, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட் விவிபேட் இயந்திரத்தை காகித சீட்டை அச்சிடும்படி கட்டளையிடுகிறது.

சீல் வைக்கப்பட்ட பெட்டியில் சீட்டு விழுவதற்கு முன்பாக 7 விநாடிகள் ஒளிர்கிறது. வாக்குப்பதிவுக்கு முன் பொறியாளர்கள் முன்னிலையில் இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகிறது. அதனால் தவறு நடைபெற வாய்ப்பில்லை" என்று பதிலளித்தார்.

விவிபேட் பிரிண்டரில் ஏதேனும் மென்பொருள் உள்ளதா என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, "சின்னங்களை சேமிக்கும் ஒவ்வொரு பேட்டிலும் நான்கு மெகாபைட் ஃபிளாஷ் நினைவகம் உள்ளது.

தேர்தல் நடத்தும் அலுவலர் மின்னணு வாக்குச் சீட்டை தயார் செய்த பின்னர், சின்னத்தை லோட் செய்வார். அதில் வரிசை எண், வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை இடம்பெற்றிருக்கும். எந்த சின்னமும் முன்பே லோட் செய்யப்படாது. இது டேட்டா கிடையாது. இமேஜ் ஃபார்மட்டில் தான் இருக்கும்" என்றார்.

தொடர்ந்து வாக்குப்பதிவுக்காக எத்தனை சின்னம் ஏற்றும் அலகுகள் உருவாக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு "பொதுவாக ஒரு தொகுதியில் ஒரு சின்னம் ஏற்றும் அலகு இருக்கும். வாக்குப்பதிவு முடியும் வரை அது தேர்தல் நடத்தும் அதிகாரியின் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்றார்.

இதில் முறைகேடுகள் எதுவும் நடைபெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "தேர்வு செய்யப்பட்ட ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை மட்டும் மொத்த வாக்குகளுடன் ஒப்பிடப்படுகிறது. அனைத்து இயந்திரங்களிலும் வெவ்வேறு வகையான காகித முத்திரைகள் உள்ளன. விவிபேட் காகிதம் மெல்லியதாகவும், ஒட்டும் தன்மையுடதாகவும் இருக்கும். இது எண்ணுவதற்காக அல்ல. விவிபேட் இயந்திரங்கள் தேர்தல் அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் இருக்கும். இதனால் தவறு நடைபெற வாய்ப்பில்லை" என்றார்.

செல்வம்

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை 'டெலிட்' செய்த யுவன்?… ரசிகர்கள் அதிர்ச்சி..!

ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலா? - உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam