தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை மோடி அரங்கேற்றுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின், இன்று (ஏப்ரல் 1) விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது பெரிதாகி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. அதற்கு பதிலளித்து பாஜக அரசும் அவர்களின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
அதன்படி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஏப்ரல் 1) செய்தியாளர்களிடம் பேசியபோது, "நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்.
கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்" என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்று (ஏப்ரல் 1) முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
"பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் பதில் சொல்லுங்க பிரதமர் மோடி" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்து

