தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மன்சூர் அலிகான் வேலூர் மருத்துவமனையில் இன்று (ஏப்ரல் 17) அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறவுள்ளது. இதனால், அரசியல் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் குடியாத்தம் பகுதியில் இன்று இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

