கோடைக்காலத்தில் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம் கொத்தமல்லித்தழை. உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் தரும் கொத்தமல்லித்தழை சேர்த்து இந்த கார பால்ஸ் செய்து அசத்துங்கள்.
வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
என்ன தேவை?
அரிசி ரவை - 2 கப்
கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு
பச்சை மிளகாய் - 3
தேங்காய்த் துருவல் - கால் கப்
நெய் - 2 டீஸ்பூன்
புளி - சிறிதளவு
கடுகு - ஒன்றரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு, - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு… கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

