காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளுக்கும் மாம்பழம் மஸ்ட் என்கிற அளவுக்கு மாங்காய், மாம்பழ சீசனை என்ஜாய் செய்பவரா நீங்கள்?
மாங்காய், மாம்பழம் மட்டுமல்ல… மாவற்றலிலும் சாம்பார் செய்து ருசிக்கலாம்… இந்த வாரத்தின் ஆரம்ப நாளைக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
துவரம்பருப்பு - 100 கிராம்
மாவற்றல் - 50 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கவும்)
நறுக்கிய தக்காளி - ஒன்று
நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 4
எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாவற்றலை வெந்நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து கழுவி எடுத்துக்கொள்ளவும். பருப்புடன் மாவற்றல், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவிடவும். கலவை நன்றாக வெந்ததும் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவற்றைத் தாளித்து சாம்பாரில் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்.

