ஊறுகாய் பிரியர்களையே அசத்தும் ஸ்பெஷல் ஊறுகாய் என்றால் அது நார்த்தங்காய் ஊறுகாயாகத்தான் இருக்கும்.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகும் நார்த்தாங்காயில் ஊறுகாய் செய்து சுவையுங்கள்.
நார்த்தங்காயில் நல்ல அளவு வைட்டமின் சி இருப்பது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது கூடுதல் சிறப்பு.
என்ன தேவை
கழுவி, விதை நீக்கி நறுக்கிய கடா நார்த்தங்காய்த் துண்டுகள் (கிடாரங்காய்) - 3 கப்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 12
வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை கப்
எப்படி செய்வது
கடா நார்த்தங்காய்த்துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு ஊறவிடவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், வெந்தயம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
ஊறவைத்த நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பயன்படுத்தவும்.

